‘தந்தையால் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’.. கணவருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் கணவருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தந்தையால் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’.. கணவருடன் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கருத்துவேறுபாடு காரணமாக என் தந்தையும், தாயாரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். எனக்கு இரண்டு அக்கா உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். நானும் எனது தந்தையும் மட்டும் ஊரில் வசித்து வந்தோம். தந்தையின் நடத்தையில் சந்தேகம் வந்ததால், என்னுடைய மூத்த அக்கா என்னை சென்னைக்கு அழைத்துவந்தார்.

இந்நிலையில் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என கூறி எனது தந்தை என்னை ஊருக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஊருக்கு வந்ததும் வீட்டில் வைத்து அடைத்து பாலியல் ரீதியாக சித்ரவதை கொடுக்க ஆரம்பித்தார். இந்த தகவலை என் அக்காவிற்கு தெரிவிக்கவே அவர் என்னை அங்கிருந்து மீட்டு சென்றார்.

இதனை அடுத்து எனது சகோதரியின் உறவினர் ஒருவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. இதனை அறிந்த எனது தந்தை எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டி புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கணவருடன் வந்து புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

GIRL, ABUSED, FATHER, HARASSMENT