'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெசன்ட் நகர் கோயில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு வந்தவர் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்!

சென்னை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மில்லர்ராஜ். இவரது மகன் பென்னிராஜ். மேளம் அடிக்கும் தொழில் செய்து வரும் இவர், கடந்த 7-ம் தேதி குடும்பத்தினருடன் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்குச் சென்றார். திருவிழாவை பார்த்து விட்டு கடற்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு பேசி கொண்டிருந்தார்கள்.

அப்போது பென்னிராஜ், தான் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திருப்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர், கடற்கரையில் பென்னிராஜை தேடினார்கள். இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கத்திக் குத்துக்காயங்களுடன் பென்னிராஜ் இறந்துகிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.

இதற்கிடையே பென்னிராஜ் கொலை செய்யப்பட்ட இடம் அவரது குடும்பத்தினர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் தான் இருந்துள்ளது. ஆனால் அங்கு நடைபெற்ற சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த சாஸ்திரிநகர் காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதில் பென்னிராஜ் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில், கண்ணகிநகரைச் சேர்ந்த கும்பல் ஒன்று அங்கு அமர்ந்திருக்கின்றனர். அந்த இடத்தின் அருகில் பென்னிராஜ் சிறுநீர் கழிக்கச் செல்கிறார்.

அப்போது 'அங்க போ, இங்கு ஆள் இருக்கிறது கண்ணுக்கு தெரியலையா' என  கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதை கண்டுகொள்ளாத பென்னிராஜ் அங்கு சிறுநீர் கழிக்கிறார். இதையடுத்து, கண்ணகிநகர் கும்பலுக்கும் பென்னிராஜுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக பென்னிராஜை கொலை செய்து விட்டு தப்பிச் செல்கிறது.

இதனிடையே பென்னிராஜை கொலை செய்த கும்பல், கஞ்சா போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். கொலை கும்பலிடமிருந்து  தப்பிக்க பென்னிராஜ் கடுமையாக போராடியுள்ளார். ஆனால் ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதால் அவரால் சமாளிக்க முடியவில்லை. மேலும் இந்தக் கொலை வழக்கில் கண்ணகிநகர் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MURDER, KILLED, CHENNAI, BESANT NAGAR BEACH