'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!

திருவாரூர் அகரநல்லூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரவி தினமும் மதுஅருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தொடர்ந்து ரவி தகராறு செய்து வந்துள்ளார்.

இதேபோல் திங்கள்கிழமையன்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இரவு நீண்டநேரமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ரவி தூங்கி விட்டார். இந்த நிலையில் கணவர் மீது சித்ரா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வரும் கணவரை கொலை செய்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இன்று அதிகாலையில் வீட்டில் ரவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரவியின் தலையில் சுத்தியால் சித்ரா ஓங்கி அடித்துள்ளதாகத் தெரிகிறது. கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் பலமுறை சுத்தியால் தாக்கியதால் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் ரவியை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன், திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம், தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீசார் சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை கைது செய்தனர். கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ATTACK, MURDER, THIRUVARUR