வினையில் முடிந்த விளையாட்டு.. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி அருகே விளையாடியபோது, இரும்பு ஆணியை விழுங்கிய சிறுவன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

வினையில் முடிந்த விளையாட்டு.. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

ஓசூர் அருகே  உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். கல் உடைக்கும் தொழிலாளியான இவரின் 5 வயது மகன் விஸ்வநாத், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென அங்கு இருந்த ஆணியை விளையாட்டாய் எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளான். ஆணி சிறுவனின் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்டது.

இதனால் வலியால் துடித்த சிறுவனை அவனது பெற்றோர், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால் அங்கு மருத்துவர்களால் ஆணியை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர்கள் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

அப்போது சிறுவன் விழுங்கிய ஆணி அவனது வயிற்றுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். விடுமுறை நாட்களில் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்வது நலம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

IRONNAIL, HOSUR, CHILD