'என் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சுது' ... பேருந்து நிலையத்தில் நின்ற பெண்ணிடம் ... மது போதையில் நபர் செய்த ரகளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரை தனது மனைவி என்று கூறி மது போதையில் இருந்த நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

'என் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சுது' ... பேருந்து நிலையத்தில் நின்ற பெண்ணிடம் ... மது போதையில் நபர் செய்த ரகளை!

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் தனது பேருந்தினுள் ஏற சென்ற போது அந்த பெண்ணை மது போதையில் தள்ளாடி வந்த நபர் ஒருவர் வழிமறித்து பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். தன்னை அடித்ததற்கான காரணத்தை அந்த பெண் கேட்க முயல, போதையில் இருந்த நபரோ மீண்டும் தாக்கியுள்ளார். இதைக் கண்ட பயணிகள் சிலர் போதையில் இருந்த நபரை தடுக்க முயன்றுள்ளனர். 'நான் என் பொண்டாட்டியை அடிக்கிறேன், அதை கேட்க நீங்கள் யார்' என போதையில் இருந்த நபர் சக பயணிகளை மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு பதறிப் போன அந்த பெண் இவர் எனது கணவர் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரத்தில் பதட்டம் ஏற்பட்டது. அப்போது அருகில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அங்கு வந்தனர். அப்போது அந்த பெண், போலீசாரிடம் இவர் யார் என்றே தெரியவில்லை. என்னை அவரது மனைவி என்று சொல்லி அடிக்கிறார் என குற்றஞ்சாட்டினார். போலீசார் விசாரணையில் மது போதையில் இருந்தவர் சின்னராஜ் என்பதும் அந்த பெண் அவரது மனைவி இல்லை என்பதும் உறுதியானது. 'போதையில் இருந்ததனால் என் மனைவி போன்று தெரிந்தது, அதனால் தான் அடித்தேன்' என சின்னராஜ் விளக்கமளித்துள்ளார். மேலும் சின்னராஜை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

வேலூர் பேருந்து நிலையத்தில் வழிப்பறி மற்றும் போதை நபர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

VELLORE, TAMILNADU