கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில் அவரது மகள் ஐஸ்வர்யா(23) பெயரில் சிங்கப்பூரில் பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
![5 வருடத்தில் ரூ.'100 கோடி'யாக உயர்ந்த சொத்து.. யார் இந்த ஐஸ்வர்யா? 5 வருடத்தில் ரூ.'100 கோடி'யாக உயர்ந்த சொத்து.. யார் இந்த ஐஸ்வர்யா?](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/dk-shivakumars-daughterquestioned-in-money-laundering-case-thum.jpg)
கடந்த 2017-ம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டிற்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சென்ற டி.கே.சிவக்குமார் அங்கு பணத்தை முதலீடு செய்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். மேலும் 2013-ம் ஆண்டு ரூபாய் 1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டு 100 கோடிகளாக உயர்ந்துள்ளது.இது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. தொடர்ந்து, இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐஸ்வர்யா ஆஜரானார்.
அவரிடத்தில் சிங்கப்பூர் முதலீடு குறித்த விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.