சினிமா பாணியில் 8 ஆயிரம் சிசுக்களை கருவிலேயே கொன்ற கும்பலை பொறிவைத்து பிடித்த போலீசார்!

Home > தமிழ் news
By |
சினிமா பாணியில் 8 ஆயிரம் சிசுக்களை கருவிலேயே கொன்ற கும்பலை பொறிவைத்து பிடித்த போலீசார்!

திருவண்ணானலையில் 10 வருடங்களாக சட்டத்துக்கு புறம்பான வகையில் கருக்கலைப்பு செய்துவந்த கும்பலை போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர். வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளரான தமிழ்ச்செல்வன்(53) மற்றும் அவரது மனைவியும் போலி டாக்டருமான ஆனந்தி(51) மற்றும் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களைத் தேடி கண்டுபிடித்து, மர்மமான முறையில் இரவு வேளையில் அழைத்து வரும் வேலையை 2 ஆயிரம் ரூபாய் கமிஷனுக்காக செய்த ஆட்டோ டிரைவர் சிவகுமார் (43) ஆகியோர் 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டிலும் இதே காரியத்தை செய்ததற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் வெளிவந்து தற்போது அதே காரியத்தை தொடர்ந்துள்ளனர்.


சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் அமைத்த சிறப்புக் குழு இதுபற்றிய தகவல்களை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். முதல் கட்ட ஆபரேஷனாக ஆனந்தி வீட்டுக்கு 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை நடிக்க வைத்து கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண் போல் ஆனந்தியிடம் செல்போனில் பேச வைத்துள்ளனர்.

 

புரொசிஜர் படி கருக்கலைப்பு க்ளைண்டினை மத்திய பேருந்தில் நிற்க சொல்லியிருக்கிறது ஆனந்தி தரப்பு. அங்கு ஆட்டோ சிவகுமார் வந்து கருக்கலைப்பு வாடிக்கையாளரான கர்ப்பிணி பெண்ணை சோதனைக்கு பின்பு ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.


பக்கத்தில் இருக்கும் இடத்துக்குச் செல்ல, பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக சுற்றி, திசைகளை குழப்பி வாடிக்கையாளர் தன் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடாதபடி, திருவண்ணாமலைக்கு அருகில் வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் இருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்று தமிழ்ச்செல்வன் மற்றும் ஆனந்தி இருவரிடமும் கர்ப்பிணி பெண்ணை சேர்த்துள்ளார் சிவகுமார்.

 

அதன் பின், அந்த பெண்ணை ஸ்கேன் மூலம் பரிசோதித்த ஆனந்தி அடுத்த நாள் (டிசம்பர். 03) வரசொல்லி 6 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். அவ்வளவுதான்.. இந்த தருணத்துக்காக கன்னிப்பொறி வைத்து காத்திருந்த காவலர்கள் சற்றும் தாமதிக்காமல், மடமடவென ஆனந்தியின் வீட்டுக்குள் நுழைந்து சுற்றி வளைத்து இந்த கும்பலை பிடித்துள்ளனர்.


பாலினம் கண்டறிதல், சட்ட விரோத கருக் கலைப்புக்கான பிரம்மாண்ட உட்கட்டமைப்பு வசதிகள் என ஆனந்தியின் வீடு அப்போலோ மருத்துவமனை போல் 8 லட்சம் மதிப்பிலான சகல மருத்துவ வசதிகளுடன் இருந்ததை பார்த்து அதிர்ந்த காவல்துறையினர் இந்த கும்பலை விசாரித்தனர். அதில் இரவு நேரங்களில் மட்டுமே இதைச் செய்யும் இந்த கும்பல் 20 முதல் 50 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு 8 முதல் 10 ஆயிரம் கருக்களை கடந்த 10 வருடங்களில் செய்துள்ள உண்மையை கேட்டு அதிர்ந்துள்ளனர். உடனே இந்த மூவர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.

 

மேலும் ஒரே குற்றத்தை தண்டனைக்கு பிறகும் தொடர்ந்து செய்பவர்கள் மீது பாயும் குண்டர் சட்டம் உட்பட் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து 10 வருடத்துக்கு சிறை தண்டனை இவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் உறுதியாக இவர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

THIRUVANNAMALAI, CRIME, POLICE, HUMANITY, ABORTION