நடமாடும் நகைக்கடை...'தமிழகத்தை சேர்ந்த தாதா கொடூரமாக வெட்டி படுகொலை':மும்பையில் பரபரப்பு!

Home > தமிழ் news
By |
நடமாடும் நகைக்கடை...'தமிழகத்தை சேர்ந்த தாதா கொடூரமாக வெட்டி படுகொலை':மும்பையில் பரபரப்பு!

மும்பையின் பிரபல தாதா  டி.கே.ராவின் கூட்டாளியும்,தமிழகத்தை சேர்ந்தவருமான டி.பி.ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

 

மும்பை சயான் கோலிவாடா கோக்ரி அகார் பகுதியில் உள்ள சூர்யநிவாஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் மாரிமுத்து என்கிற டி.பி.ராஜா.இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.இவர் மும்பையை சேர்ந்த பிரபல தாதா டி.கே.ராவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். டி.கே.ராவிற்கு இவர் வலது கரம் போல செயல்பட்டு வந்தார்.

 

டி.பி.ராஜா மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.நவி மும்பையில் நடைபெற்ற வங்கி கொள்ளையில் ராஜா மூளையாக செயல்பட்டார்.காவல்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மூன்று வருடத்திற்கு முன்பு தான் வெளியே வந்தார்.எப்போதும் கழுத்தில் அதிகமாக நகைகளை அணியும் பழக்கம் கொண்ட ராஜா,உயிர் பயத்தினால் எப்போதும் தனது ஆட்களின் பாதுகாப்போடு தான் வலம் வந்தார்.எதிர் அணியின் கடும் மிரட்டல் காரணமாக,குடும்பத்துடன் தங்குவதை தவிர்த்து விட்டு தனியாக வசித்து வந்தார்.

 

இந்நிலையில்,நேற்று அவருடன் பாதுகாப்பிற்காக ஆட்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த 2 பேர்,பிற்பகல் 3 மணியளவில் டி.பி.ராஜாவின் வீட்டிற்குள் புகுந்தனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உதவிக்கு யாரையும் அழைத்து விட கூடாது என்பதற்காக,கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார்கள்.இதனால்  சிறிது நேரத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துபோனார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடலா டி.டி. காவல் துறையினர்,டி.பி.ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சயான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, MUMBAI, MUMBAI GANGSTER, DK RAO, TP RAJA