காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடும் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது .
இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதை தேச பக்தியோடு தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.