‘உலக தரம் வாய்ந்த பினிஷர், அவர் எடுத்த முடிவு தான் சரி’.. ‘தல’தோனிக்கு ஆதரவாக பேசிய அதிரடி பேட்ஸ்மேன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் வீரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.

‘உலக தரம் வாய்ந்த பினிஷர், அவர் எடுத்த முடிவு தான் சரி’.. ‘தல’தோனிக்கு ஆதரவாக பேசிய அதிரடி பேட்ஸ்மேன்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் மட்டும் 36 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக தோனி மட்டும் கடைசி வரை விளையாடி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால் தோனியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழத்தொடங்கின. தோனி மிகவும் நிதானமாக விளையாடினார். இவர் கடைசி ஓவரில் 5 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்தது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது. இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து தோனி நிறைய சிங்கிள்கள் எடுக்கவில்லை, மிகவும் நிதனாமாக விளையாடினார் என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வழக்கம் போல தோனி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ‘விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது, சீரான ஸ்டிரைக் ரேட் என்பது இந்த மைதானத்துக்கு போதுமானது தான். விக்கெட் விழுந்து கொண்டிக்கும் சமயத்தில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அடித்து ஆட நினைப்பது சிரமான விஷயம். தோனி ஒரு உலக தரம் வாய்ந்த பினிஷர். அவர் சரியான ஷாட் அடிப்பதற்கு மிகவும் முயற்சி செய்தார். அவர் இடத்திலிருந்து முயற்சித்தது தான் சரி. அவர் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த இடத்தில் அது சிரமான ஒன்று’ என தோனி குறித்து ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கருத்து கூறியுள்ளார்.

INDVAUS, MSDHONI, MAXWELL, T20I