இந்திய வீரர்களுக்கு சொந்த ஊரில் ட்ரீட் வைத்து அசத்திய ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி ராஞ்சியில் விருந்தளித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய வீரர்களுக்கு சொந்த ஊரில் ட்ரீட் வைத்து அசத்திய ‘தல’ தோனி!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.

முன்னதாக பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நாக்பூரில் நடந்த 2 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வென்றதன் மூலம்  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500  ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி என்கிற சாதனையை இந்தியா படைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 2 -வது ஒருநாள் போட்டியிலும் கடைசி ஓவரில் விஜய் சங்கருக்கு அறிவுரை வழங்கி வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சி வந்துள்ளனர். இதனால் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோனி இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனை விராட் கோலி, சாஹல் உள்ளிட்ட வீரர்கள் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனிக்கு‘விருந்தளித்தற்கு நன்றி’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MSDHONI, VIRATKOHLI, CHAHAL, INDVAUS, TEAMINDIA