‘நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்’ புத்தக வெளியீட்டிற்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பிண்ணனி என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

 

‘நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்’ புத்தக வெளியீட்டிற்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பிண்ணனி என்ன?

சென்னையில் இன்று ரபேல் ஒப்பந்தம் குறித்த ‘நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிடயிருந்த நிலையில், புத்தகம் வெளியிடல்நிகழ்விற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் புத்தகத்தை வெளியிடும் பாரதி பதிப்பகத்தில் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர் என்.ராம், இயக்குநர் ராஜுமுருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குமரேசன் பேசியதாவது, “இந்தப் புத்தகத்தை வெளியிட வெவ்வேறு அரங்கங்களை முன்பதிவு செய்திருந்தோம்.ஆனால், அரசியல் ரீதியான புத்தகம் என்பதாலும் நெருக்கடி கொடுக்கப்பட்டு அரங்கம் கொடுக்க மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயற்பொறியாளர் கொடுத்த கடித்தத்தில் ‘வெளியிடப்படும் புத்தகம் அரசியல் ரீதியானது. இது தேர்தல் விதிமுறையை மீறும் செயலாகும். எச்சரிக்கையையும் மீறி நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கடிதம் ஒன்று வந்தது.

இதையடுத்து வந்த தேர்தல் பறக்கும் படையின் காவலர்கள், வெளியிட இருந்த புத்தகங்களை கையகப்படுத்தினர். ரபேல் ஊழல் குறித்து பத்திரிகையில் தலையங்கம் எழுதப்படுகிறது. ஊடகங்களில் விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மக்கள் பேசுகிறார்கள். அப்படியென்றால் அவையெல்லாம் விதிமீறலா…? இந்தப் புத்தகம் ரபேல் ஒப்பந்தம் குறித்து பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான். இதை தடை செய்ய காரணம் என்ன…? பொது மக்கள் பலரும் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்வு இதை உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், எழுத்தாளர் ஜெயராணி இது குறித்து பேசிய போது, “தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையமே செய்கிறது.இந்நிலையில், மோடியின் பயோபிக் வெளிவர எந்தவொரு தடையும் இல்லாத போது ரபேல் பேர ஊழல் குறித்த புத்தகத்திற்கு மட்டும் தடை விதித்தது தேர்தல் ஆணையம் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதையேக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

ELECTIONCOMMISSION, RAFALE SCAM BOOK, PERMISSION DENIED