'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தனது வித்தியாசமான முயற்சியால், பொருளாதாரத்தைக் கெத்தாகப் பிடித்துக் கொண்டு நிற்கிறது துருக்கி.

'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா!

கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் துருக்கியும் இருக்கிறது. அதிலும் முதல் 10 நாடுகளின் பட்டியலிலும் துருக்கி வருகிறது. அங்கு 74, 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,643 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் போதும், இறப்பு விகிதம் என்பது குறைவு தான். இதற்கிடையே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதும் எப்படி அதை எல்லாம் சமாளித்து விட்டு துருக்கி தனது பொருளாதாரத்திலும் கவனம் செலுத்துகிறது என்பது தான் பல நாடுகளின் மில்லியன் டாலர் கேள்வி.

அதற்கு துருக்கி எடுத்த அயராத முயற்சிகளே காரணம். வைரஸ் பரவலை தடுக்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஊரடங்கு அமலில் உள்ளது. அவ்வாறு ஊரடங்கு அமலில் இருக்கும் வார இறுதி நாட்களில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வயதினர் வெளியே வரும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. மேலும் வங்கிகள் குறைந்த நேரத்தில் மட்டும் இயங்கும்.

மேலும் பலகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசே மாஸ்க்குகளை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மேலும் வயதானவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்குகிறது. நாட்டின் பொருளாதாரமும் பாதிக்காத வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே அரசின் சரியான திட்டமிடல் மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் கொரோனாவை ஒழிப்பதோடு, பொருளாதாரத்தையும் காப்பாற்ற முடியும் என்பதற்குத் துருக்கி ஒரு சிறந்த உதாரணம்.