ஐ.டி. துறையில் உள்ள இந்தியர்களுக்கு சிக்கல்!?.. கொரோனா வைரஸ் பாதிப்பால்... அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அமெரிக்காவில் குடியேறும் பிறநாட்டினரைத் தற்காலிகமாகத் தடுக்க விரைவில் நிர்வாகரீதியான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஐ.டி. துறையில் உள்ள இந்தியர்களுக்கு சிக்கல்!?.. கொரோனா வைரஸ் பாதிப்பால்... அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மோசமான உயிரிழப்புகளையும், மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 7.92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

கொரோனா வைரஸ் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2.2 கோடி மக்கள் வேலையின்மை உதவித்தொகைக்கு அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வேலையின்மை அளவு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஹெச்1பி விசா மூலம் இந்தியர்களும், சீனர்களும் அதிகமான அளவில் பணியாற்றுகின்றனர். அதிபர் ட்ரம்ப் தனது தொடக்க கால முழக்கத்தை மீண்டும் கையிலெடுத்து அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்று பேசியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.

கண்ணுக்கு தெரியாத எதிரியின் (கொரோனா) தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

எச்1பி விசா வழங்குவதில் இந்தியர்கள் ஏற்கெனவே பல்வேறு பின்னடைவுகளையும், பிரச்சினைகளையும் சந்தித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.