‘கொத்து கொத்தா உயிர்பலி கொடுத்த இத்தாலி!’... ‘கட்டுக்குள் கொண்டுவர கையாளும் புது ரூட்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த பல நாடுகளில் முக்கியமான நாடு இத்தாலி. ஆனால் இத்தாலி இந்த வைரஸை தன் கட்டுக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கொத்து கொத்தா உயிர்பலி கொடுத்த இத்தாலி!’... ‘கட்டுக்குள் கொண்டுவர கையாளும் புது ரூட்!’

மார்ச் மாதம் மத்தியில்வரை உலகிலேயே அதிக அளவு உயிர்களை பறிகொண்டிருந்தது இத்தாலி. கொரோனா உதயமான இடம் சீனா என்றாலும் அதன் மையப் புள்ளியாக மாறும் அளவிற்கு இத்தாலி கொத்துக்கொத்தாக உயிர்களை பறி கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தாலி மீட்சி பாதைக்கு திரும்பி கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்கு முக்கியமான காரணம் அங்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுதான் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறி தெரியாதவர்களின் உடலில் இருக்கும் ரத்த பிளாஸ்மாவில் வைரஸை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடி உருவாகும் என்றும், இந்த பிளாஸ்மா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், எனவே இவர்களிடம் இருந்து பிளாஸ்மாவைக் கொடையாக பெற்று நோயாளிகளுக்கு இதனை மருந்தாக செலுத்தும்போது ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்றும் நோயின் தீவிரத்தை இந்த ரத்த பிளாஸ்மா குறைப்பதில் முக்கியமான பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த சிகிச்சை முறை சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இத்தாலி, மேலும் இந்த பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்று குணமடைந்தவர்களிடமிருந்து பிளாஸ்மாவை கொடையாக பெற்று வருவதோடு செப்டம்பர் இறுதிக்குள் இந்த சிகிச்சை மாதிரி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.