'குணமானவர்களுக்கு மீண்டும் வந்த கொரோனா'...எப்படி சாத்தியம்?...மருத்துவர்கள் வைத்த புதிய ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்கொரியாவில் குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவர்கள் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

'குணமானவர்களுக்கு மீண்டும் வந்த கொரோனா'...எப்படி சாத்தியம்?...மருத்துவர்கள் வைத்த புதிய ட்விஸ்ட்!

தென்கொரியாவின் டாயிகு நகரம் கொரோனா தாக்கத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 51 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் தற்போது குணமாகிவிட்டார்கள் என அறிவிக்கப்பட்டு 51 பேரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில் அவர்கள் 51 பேருக்கும் மீண்டும் மருத்துவப்பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய தென் கொரிய மருத்துவ விஞ்ஞானிகள், ''இது மிகவும் ஆச்சரியமான விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது.

இதனிடையே குணம் அடைந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு கண்காணிப்பில் நிச்சயம் இருக்க வேண்டும். அவர்களை  கொரோனா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது'' என கூறியுள்ளனர். ஆனால் கொரிய மருத்துவர்களின் தகவலுக்கு நேர்மாறான தகவலை இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ''இதில் பரிசோதனைகள் தவறாக கையாளப்பட்டு இருக்க வேண்டும். என்னை பொறுத்துவரை குணம் அடைந்தவரை மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.