'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் சீன அரசு வீடுகளில் கேமராக்களை வைத்து கண்காணிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் சீன அரசு எடுத்துவரும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் வீட்டின் முன் கதவுக்கு அருகிலும், சில வேளைகளில் வீட்டினுள்ளேயும் கேமராக்கள் வைத்து சீன மக்கள் கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிஎன்என் செய்தியில், "சமீபத்தில் இயன் லாஹிஃப் என்பவருடைய குடும்பம் தெற்கு சீனாவிலிருந்து பெய்ஜிங் சென்று திரும்பியபோது, அவருடைய வீட்டின் முன் கதவுக்கு அருகே கேமரா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார். பின்னர் வீட்டின் கதவைத் திறந்தபோதும் கேமரா இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவில் தற்போது எந்த ஊருக்குச் சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தனிமையில் இருக்கும் குடும்பத்தினர் வீட்டில் கேமராக்கள் வைக்கப்படும் என எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது குறித்த எந்தவொரு சட்டமும் இயற்றாமல், அறிவிப்பும் இல்லாமல் பிப்ரவரியிலிருந்தே சீனாவின் பல நகரங்களிலும் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது சீன மக்களின் வாழ்க்கையில் இது பழகிய ஒன்றாகியுள்ளது.

 

2018 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 349 மில்லியன் கண்காணிப்புக் காமராக்கள் சீன நகரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவை விடவும் 5 மடங்கு அதிகமாகும். மேலும் உலகிலேயே கண்காணிப்புக் கேமராக்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள 10 நகரங்களில் சீனாவில் மட்டும் 8 நகரங்கள் இருக்கும் என பிரிட்டன் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் கேமராக்கள் தெருக்களிலிருந்து வீட்டுக்குள்ளும் புகுந்துள்ளது.

இது தொடர்பாக சிஎன்என் ஊடகம் சீன சுகாதார அதிகாரிகள், பொது பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டபோது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அத்துடன் வீட்டில் இருக்கும் கேமராவால் கதவு திறக்கப்படும்போது, கதவில் இயக்கம் இருக்கும்போது போட்டோக்களை மட்டுமே எடுக்க முடியும், வேறு எதையும் இது படம் பிடிக்காது என ஒரு மாகாணத்தைச் சேர்ந்த போலீஸார் பதிலளித்துள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.