'நாட்டின் அதிபர் என்றும் பாராமல்... சரமாரியாக அவர் விடியோக்களை நீக்கிய யூடியூப்'!.. பூதாகரமாகும் விவகாரம்!.. தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் அதிபர் போல்சனாரோவின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த கொரோனா தொடர்பான வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

'நாட்டின் அதிபர் என்றும் பாராமல்... சரமாரியாக அவர் விடியோக்களை நீக்கிய யூடியூப்'!.. பூதாகரமாகும் விவகாரம்!.. தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

போல்சனாரோ, அடிப்படையில் கொரோனா பொதுமுடக்கத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, மாஸ்க் அணிவதற்கு எதிராக பேசுவது, கொரோனா தடுப்புப்பணியில், தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பான சந்தேகப்பார்வைகள் எழுப்பி வந்தது போன்றவற்றுக்காக உலகளவில் பல விமர்சனங்களை கடந்த மாதங்களில் எதிர்கொண்டவர்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் யூடியூப் நிறுவனத்துக்கு எதிரானது என்பது கவனிக்கத்தக்கது. அதன் அடிப்படையிலேயே யூடியூப் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நீக்கப்பட்டிருக்கும் வீடியோக்களில் என்ன இருந்தது என்பது பற்றி 'ஓ க்ளோபோ' என்ற பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவை எய்ட்ஸூடன் ஒப்பிட்டிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் தனது உரையில், "எய்ட்ஸ் எப்படி ஒரு காலத்தில் அதிகமாக பரவி, பின் பரவல் குறைந்த பின்னும் தனது தாக்கத்தை நீடிக்கிறதோ, அப்படி கொரோனாவும் இருக்கும்" என்பது போல பேசியதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு வீடியோவில், பிரேசிலை சேர்ந்த மருத்துவரொருவர், மலேரியாவுக்கான ஹைட்ராக்சி க்ளோரோக்யூனைன் மற்றும் டெங்கு, ஜிகா வைரஸ், இன்ஃபுளூயன்ஸா, HIV தொற்று உள்ளிட்ட பல நோய்களுக்கும் அளிக்கப்படும் ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளை கொரோனாவுக்கு பரிந்துரைந்திருந்ததாக சி.என்.என். கூறியுள்ளது. இவையாவும் தங்களின் விதிகளுக்கு எதிரானது என யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.

இதுபற்றி யூடியூப்பின் அறிக்கையில், "எங்களுடைய விதிகளின்படி, ஹைட்ராக்சி-க்ளோரோக்யூனைன், ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளின் கொரோனா தடுப்பு / சிகிச்சை ரீதியான கருத்துகளை நாங்கள் வெளியிடுவதில்லை. அதேபோல மாஸ்க் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில்லை என்பது போன்ற கருத்துக்களையும் நாங்கள் வெளியிடுவதில்லை" எனக் கூறியுள்ளது.

அதிபர் போல்சனாரோவின் சமூக வலைதள கணக்குள் மீது, இதற்கு முன்னரும் இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டில் அதிகப்படியான கொரோனா பரவல், நாட்டில் கொரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என பேசிய காரணத்துக்காக, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அதிபர் போல்சனாரோவின் சில வீடியோக்களை விதி மீறல் அடிப்படையில் நீக்கியிருந்தது.

இதனால் அதிபரின் 15 வீடியோக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் இதுபற்றி அதிபர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை என்றும், பிரேசிலின் உள்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

brazil youtube removes bolsonaro videos covid misinformation

இந்த வீடியோ நீக்கத்தின் பின்னணியில் மிக கவனமான மதிப்பாய்வும், தங்கள் நிறுவனத்தின் விதிகளும் மட்டுமே உள்ளது என்றும், அதிபரின் பதவியோ அவருடைய அரசியல் / அறிவியல் நிலைப்பாடுகளோ கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், யூடியூப் நிறுவனம் பத்திரிகை அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

போல்சனாரோ, தனது யூடியூப் வழியாகவே வாரந்தோறும் மக்களை சந்திக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் நிலையில், யூடியூப்பின் இந்த நடவடிக்கை அதிக விமர்சனங்களுக்குட்பட்டே பார்க்கப்படுகிறது. அந்த சந்திப்பின் வழியாகவே அவர் பல நேரங்களில் தன் நாட்டு அமைச்சர்களை சந்தித்து நாட்டு நடப்பு குறித்தும், பிரச்னைகள் குறித்தும் பேசுவார். பெரும்பாலும் அவை லைவ்-ஸ்ட்ரீம் செய்யப்படும்.

அந்தவகையில், யூடியூப்தான் பிரேசில் அதிபரை மக்களுடன் இணைக்கும் முக்கியப்பாலமாக இருந்துவருகிறது. எனினும், அவர் கணக்கு முடக்கப்படவில்லை என்பதால், இது எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்