'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே ஆட்டம் காண வைத்துள்ள இந்த நேரத்திலும், கொரோனவை வைத்து வியாபாரம் செய்து சம்பாதித்த மருத்துவமனை இயக்குநரின் செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்படி என்ன செய்தார், எப்படி ஏமாற்றினார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு.

'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்!

வங்காள தேசத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவரச் செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. தற்போது அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குநர் முகமது ஷஹீத். இவர் தனது மருத்துவமனையில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்குகளைக் காண்பித்து வந்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்குப் பரிசோதனை எதுவும் செய்யாமல், பணத்தை வாங்கிக் கொண்டு கொரோனா இல்லை எனப் போலியாகச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவர, அவர்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் முகம்மதுவின் மருத்துவமனையில் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது. ஆனால் அதில் 4 ஆயிரத்து 200 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

எஞ்சிய 6 ஆயிரத்து 300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது. பணத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்து 300 பேருக்குப் போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது. உலகமே கோரப் பிடியில் சிக்கி இருக்கும் நிலையில், ஒரு பிரபல மருத்துவமனை இயக்குநரே பணத்திற்காக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச்சூழ்நிலையில் முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு போலீசார் இறங்கிய நிலையில், மருத்துவமனை தலைவரான முகமது தலைமறைவானார். 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காள தேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்படுவோம் என நினைத்த முகமது எல்லையோர ஆற்றின் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச்செல்ல முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே முகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள தேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமலே வைரஸ் இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வங்காள தேசத்தில் கொரோனா வைரஸ் குறித்து வெளியாகும் தகவலின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

மற்ற செய்திகள்