'மாதம் 97 ரூபாதான் சம்பளம்?'.. ட்விட்டர் CEOவுக்கு இந்த நிலைமை ஏன்?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பொதுவாகவே பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களின் சம்பள விபரங்கள் பெரிதாக பேசப்படுவதற்கு காரணம் அவர்கள் அதிகமான சம்பளங்களை வாங்குவார்கள் என்பதுதான்.

'மாதம் 97 ரூபாதான் சம்பளம்?'.. ட்விட்டர் CEOவுக்கு இந்த நிலைமை ஏன்?

அவ்வகையில் ட்விட்டரின் முதன்மை அலுவலரான ஜாக் டெர்சி கடந்த ஆண்டுக்கான மொத்த சம்பளமாக 97 ரூபாயை பெற்றிருக்கிறார் என்கிற உண்மை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி ஒரு பெரிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்க அரசின் SEC ஆணையத்திடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களின்படி அவருடைய சம்பளம் இந்திய மதிப்பில், மாதத்திற்கு வெறும் 97 ரூபாய்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.40 அமெரிக்க டாலர்களைதான் ஜாக் சம்பளமாக பெறுகிறார்.

தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனத்தின் 2018-க்கான அதிக சம்பளத்தை பெற்றவர் ஆப்பிளின் சிஇஓ டிம் குக். ஆனால் ஜாக் நிர்வகிக்கும் ஸ்கொயர் நிறுவன பங்குகளின் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகவும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு 4.7 பில்லியன் டாலராகவும், மேலும் ட்விட்டர் பங்குகளில் இவருக்கான மதிப்பு 600 மில்லியன் டாலர்களாகவும் இருக்கிறது. அப்படி இருக்க ஏன் இவ்வளவு சொற்பமான சம்பளத்தை அவர் வாங்குகிறார் என்கிற காரணத்திற்கு ஒரு வலுவான பின்னணி இருக்கிறது.‌

கடந்த 2012-ஆம் ஆண்டு அதிக டாலர்களை சம்பளமாக பெற்ற பேஸ்புக் அதிபர் ஸக்கர்பெர்க்கின் தற்போதைய சம்பளம் மிகக் குறைவானதுதான். இதேபோல் ஆரிக்கிளின் லாரி எலிசன் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் உள்ளிட்டோரின் சம்பளமும் 1 டாலராக இருக்கிறது. இதனை 1 டாலர் சேலரி என்று குறிப்பிடுகின்றனர்.  அதாவது 18-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் இணையற்ற அரசியல் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் பலரும் தங்களுடைய அரசுக்காக சேவையாற்றும் நோக்கில் எந்த ஒரு சிறப்பு சலுகைகளையும் பெறாமல் 1 டாலர் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டு தங்களுடைய நாட்டுக்கான கடமைகளை ஆற்றினர்.

இதைத்தான் 1 டாலர் சேலரி என்று குறிப்பிட்டு வந்தனர். எனினும் பிற்காலத்தில் ஒரு நிறுவனத்தில் ஒன் டாலர் சேலரி முறை கொண்டுவரப்பட்டபோது, அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக அவர்களின் எண்ணமெல்லாம் நிறுவனத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதனாலும், பங்குதான் வருமானம் என்பதாலும் மாதச் சம்பளம் ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு குறிப்பிட்ட தொகையாக பெற்றுக் கொள்ளப்பட்டது.

அப்படியான ஒரு தொகையாகத்தான் 1 டாலர் சேலரியை ட்விட்டர் சிஇஓ பெறுகிறார். தமிழகத்தில் கூட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 1 ரூபாயை மாதச் சம்பளமாக பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TWITTER, CEO, JACKDORSEY