'சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்'... 'காரில் கடத்த முயன்றபோது நிகழ்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்களை காரில் கடத்த முயன்றபோது, சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

'சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்'... 'காரில் கடத்த முயன்றபோது நிகழ்ந்த பரிதாபம்'!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, திருவெண்காட்டைச் சேர்ந்த அபிநயா, கேசவன் பாளையத்தைச் சேர்ந்த கவியரசி உள்ளிட்ட 4 பேர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி செல்வதற்காக, கடந்த 6-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டிலிருந்து தரங்கம்பாடி பேருந்து நிலையம் நோக்கி, நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கவியரசி மற்றும் அபிநயாவை இழுத்து காரில் தள்ளியுள்ளனர். இதில் கவியரசியின் உடை, காரில் மாட்டிக்கொண்டதால், அவர் சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிட, காரில் இருந்தவர்கள் கவியரசியை தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர். கவியரசியை மீட்ட பொதுமக்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த கவியரசி கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதனிடையே கவியரசி சாலை விபத்தில் உயிரிழந்ததாக பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக் கூறி, பொறையார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தெடர்ந்து குற்றவாளிகளை கைதுசெய்வதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

KIDNAP, DRAGGED, NAGAI