“விஜய் ஒரு விஷ வலையில் மாட்டியிருக்கார் .. என் புள்ளைய நான் காப்பாத்தணும்!!”.. ‘தந்தையிடம் விஜய் பேசினாரா? நடந்தது என்ன?’.. - SA சந்திரசேகர் ‘Exclusive’ பேட்டி! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் விஜய், தன் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையில்,  தன் தந்தையின் கட்சிக்கும் தம் ரசிகர்களின் இயக்கத்துக்கும் தொடர்பில்லை என்பதால் அதில் இணைத்துக்கொண்டு பணிபுரிய வேண்டாம் என்றும், தன் பெயரையோ, புகைப்படத்தையோ அவ்வாறு பயன்படுத்தினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“விஜய் ஒரு விஷ வலையில் மாட்டியிருக்கார் .. என் புள்ளைய நான் காப்பாத்தணும்!!”.. ‘தந்தையிடம் விஜய் பேசினாரா? நடந்தது என்ன?’.. - SA சந்திரசேகர் ‘Exclusive’ பேட்டி! வீடியோ!

இந்த நிலையில், இயக்குநரும், நடிகர் விஜய்-யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பிஹைண்ட்வுட்ஸ்க்காக பிரத்தியேகமாக அளித்த நேர்காணலின் சாராம்சத்தை இங்கு காணலாம்.

“1992ல் விஜய் நடிகரானார். 1993ல் விஜய் உட்பட யாரையும் கேட்காமல், விஜய் ஒரு பிள்ளை என்பதை தாண்டி ஒரு நடிகராக வேண்டும் என்கிற ஒரு கனவினால், ஒரு ரசிகனாக விஜய்க்கு ஒரு அமைப்பு ஆரம்பித்தேன். உச்ச நட்சத்திரம் ஆனாலும் விஜய் என் புள்ளைதான். குழந்தைதான். இன்றுவரை அவருக்கு நான் செய்ய வேண்டிய நல்லதை என் உயிர் இருக்கும் வரை பண்ணுவேன். அதை அவரிடம் கேட்டு பண்ண வேண்டியதில்லை. பிள்ளை வளர வளர பிள்ளையின் காலில் விழ வேண்டும் என்று இல்லை. குழந்தை வளருவது போன்ற ஒரு பரிணாம வளர்ச்சிதான் விஜயின் வளர்ச்சி.

விஜய்க்கு இதில்(எஸ்.ஏ.சந்திர சேகர் கட்சி) உடன்பாடில்லாமல் இருக்கலாம். அன்று ரசிகர் மன்றம் தொடங்கியது போல், விஜய்க்கு நல்லது என நினைத்து நான் கட்சி ஆரம்பிக்கிறேன்.

விஜயிடம் அரசியல் விஷயங்களை நான் அவ்வளவா பேசியதில்லை. அப்பா பண்ணியிருப்பது நல்லதென ஒரு நாள் அவரே ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். ரசிகர்களுக்கும் நான் நல்லதுதான் செய்கிறேன் என்பது தெரியும். நேற்று வந்த அறிக்கையை வைத்து உணர்ச்சிவசப்பட்டு எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க. கொஞ்சம் டைம் கொடுங்க. பொதுவாகவே விஜயிடம் 3 மாசம், 4 மாசத்துக்கு ஒருமுறைதான் பேசுறேன். இந்த அறிக்கை பற்றி கொஞ்சம் கேப் விட்டு பேசுவேன். அவர் பெயரை பயன்படுத்தினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் எடுக்கட்டும், அப்பா மேல புள்ள நடவடிக்கை எடுத்தா அது வரலாறுதானே. அது எனக்கு பெருமைதான். இயக்குநரானேன், இயக்கம் ஆரம்பித்தேன், இந்தி, தெலுங்கு-க்கு போனேன், இப்படி நான் எதைத் தொடங்கியும் தோல்வி அடைந்தது கிடையாது. கடவுள் இருக்கார். எனக்கு விஜய்தான் கடவுள்.

நான் அரசியல்வாதிகளுடன் பழகியுள்ளேன். ஓரளவுக்கு அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு நாலேஜ் இருக்கிறது. இன்றைய சூழலில் அரசியல் சேவையாக இல்லாமல் வியாபாரமாகியுள்ளது. படங்கள் மூலமாக சொல்லி பாத்துட்டோம். சொல்லி பாத்துட்டேன். சரி களத்தில் இறங்கலாமே என்று 10 வருஷத்துக்கு முன் கருதினேன். அப்போது,  நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போறேன். உன்னுடைய தொழில் பாதிக்கக் கூடாது, அதனால் உனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிடு என (விஜயிடம்) கூறினேன். நான் படம் எடுத்த காலக்கட்டத்தில் எல்லா படங்களும் பிரச்சனையை சந்தித்தன. அதனால் புரட்சிகர இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டேன். ஆனால் இந்த விவகாரம் சர்ச்சை அல்ல. விஜய் அறிக்கை கொடுக்கிறார். அவருக்கு இதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நான் வேற. விஜய் வேற. நான் சந்திரசேகர். அந்த அமைப்பு என்னுடையது. விஜய் ரசிகர் மன்றம் என்பதை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி, அதை மக்கள் இயக்கமாக மாற்றியபோது நிறுவனத்தலைவரானதும் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். இது என் அமைப்பு. ஒரு பிரபலம், நடிகரை பிடிக்கும் எனும் போது அவர் பேரில் நான் கட்சி தொடங்குகிறேன்.  நீங்கதான் (விஜய்) லயபிலிட்டி இல்லை என சொல்லிவிட்டீர்களே?

இந்த அமைப்பில் இருப்பவர்கள், 25 வருடங்களாக சேவை செய்துள்ளார்கள். அவர்களுக்கு ஊக்கம் தருவதாக இது அமையும். என்ஜினியரிங் படித்தால் இன்ஜினியரிங் வேலைக்கு போக வேண்டியது என அர்த்தம் இல்லை. அதே போல், இயக்கத்தில் இருந்து சேவை செய்கிறோம். அரசியலுக்கு வரவேண்டும் என்று அவசியம் இல்லை. நான் இதை அவசரமாக செய்யவில்லை 8 மாதங்களாக இந்த ப்ரோசஸ் நடந்துள்ளது. இன்றைய தேதி பற்றி நான் கவலைப்படல. அன்றன்றைக்கு உண்டான கடமையை நான் செய்கிறேன். விஜயே சில நாட்கள் கழித்து இதை ஏற்பார். அப்போது தொண்டர்களும் வருவார்கள் என நம்புகிறேன். அமைப்பில் இருந்து விருப்பமில்லாமல் விலகட்டும். அவங்களுக்கு (ஷோபா) விருப்பமில்லை எனும் போது வேறு ஒருவரை நியமிப்போம். மக்களுக்கு நல்ல செய்வது ஆழமான விஷயங்கள். கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க. எல்லா கேள்விகளுக்கும் தானாக பதில் வரும். இன்றையதை வைத்து பேச வேண்டாம்.

ஒரு அப்பாவும் புள்ளைக்கும் எந்த அளவுக்கு பேச்சுவார்த்தை இருக்குமோ, அந்த அளவுக்கு பேசுவோம். எந்த குடும்பத்துலதான் அப்பாவுக்கும் புள்ளைக்கும் சண்ட இல்ல? நான் ஒரு கெத்தான ஆளு. அவர் ஒரு கெத்தான ஆளு. இரண்டு கெத்தான ஆளுங்க சந்திக்கும்போது பிரச்சனை வரத்தானே செய்யும்?.. நீங்கலாம் இல்லாத ஒன்றை, அரசல் புரசலா கேட்டுகிட்டு இருக்கீங்க.. ஆனால் தெரியாத ஒரு ரகசியம் நடக்கிறது, அது சீக்கிரம் உடையும். பொய் ரொம்ப நாளைக்கு பொய்யாக இருக்காது. உண்மையும் ரொம்ப நாளைக்கும் மறைக்க முடியாது. அப்போது அப்பா நல்லது செய்திருக்கார் என்றும், கூட இருந்தவர்கள்தான் குழிபறித்திருக்கிறார் என்றும் விஜய் புரிந்துகொள்வார்.

எனக்கு என்னை பற்றி தெரியும். நான் நல்லவன். நல்லவன் மாதிரி நடிக்க வேண்டியது இல்லை. ஒரு வில்லன் தான் விஜயிடம் நல்லவன் மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார். அது உடையும். விஜய் என்னை விட புத்திசாலி. கண்டுபிடிச்சுருவார். என் வயது 78. எனர்ஜியுடன் இருக்கிறேன் , உள்ளுக்குள் பாசிடிவ் வைப்ரேஷன் ஓடுகிறது. இதைப் பற்றி நான் விஜயிடம் டிஸ்கஸ் பண்ணவில்லை, விஜய் ஒரு பாய்சன் ரவுண்டுக்குள்ள மாட்டிகிட்டு இருக்கார். அவரை வெளியில் எடுக்கணும். என் கடமை என் புள்ளைய நான் காப்பத்தணும். நான் வாழ்வது நான் செய்யும் ஒவ்வொரு படியும் அவர்தான். நிச்சயம் ஒரு நாள் அவருக்கும், மக்களுக்கும் புரியும்!”

என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.

மற்ற செய்திகள்