சூர்யா சிவாவை சஸ்பெண்ட் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. வெளியான பரபரப்பு அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி சூர்யா சிவா - டெய்சி இடையிலான ஆடியோ வெளியாகி வைரலாக பரவிய நிலையில் இருவரும் இனி சுமூகமாக பணிகளை தொடர இருப்பதாக கூட்டாக பேட்டி அளித்திருந்தனர். இந்நிலையில், சூர்யா சிவாவை ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

சூர்யா சிவாவை சஸ்பெண்ட் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. வெளியான பரபரப்பு அறிக்கை..!

பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர். இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டெய்சி - சூர்யா சிவா இருவரும் மனமுவந்து சுமூகமாக பணிகளை தொடர இருப்பதாக தெரிவித்தனர். அப்போது பேசிய டெய்சி,"சூர்யா சிவா அவர்கள் வெகுகாலமாக என்னை அக்கா என்று தான் அழைப்பார். பெரிய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்த கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளோம். ஆகவே இருவரும் இனி சுமூகமாக பணிகளை தொடர இருக்கிறோம்" என்றார்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் திருச்சி சூர்யா சிவாவை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை வெளியிட்ட அந்த அறிக்கையில்,"இருவரும் சுமுகமாக செல்ல விரும்பினாலும் தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சுமுகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனால் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ANNAMALAI, SURYA SIVA, BJP

மற்ற செய்திகள்