'நண்பன்னு நம்பி தானே உன்ன வீட்டுக்குள்ள விட்டேன்'...'இப்படி சீரழிச்சிட்ட'... நெஞ்சை உருக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நண்பன் தானே என்று நம்பி வீட்டிற்குள் விட்ட நண்பனால், தனது குடும்பமே சீரழிந்து விட்டதாக ஆடியோ பதிவை வெளியிட்டு விட்டு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நண்பன்னு நம்பி தானே உன்ன வீட்டுக்குள்ள விட்டேன்'...'இப்படி சீரழிச்சிட்ட'... நெஞ்சை உருக்கும் சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்தவர் மகேஷ். தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், திடிரேன கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தனது மகன்களை பார்க்கணும் போல இருக்கு என தனது தாயிடம் கூறிய மகேஷ், அவர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி கொண்டு வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற சிறிது நேரத்தில், சீனந்தோப்பு என்ற காட்டு பகுதிக்கு சென்ற அவர்,  உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தான் மனவேதனையில் வி‌ஷத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்துபோன அவர், உடனடியாக மற்ற உறவினர்களுடன் அந்த பகுதிக்கு சென்று, மயங்கிய நிலையில் கிடந்த மகேஷை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக இறந்தார். இந்தசூழ்நிலையில் மகேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, ஆடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் ''நான் மகேஷ் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார். பின்னர் அவர் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும், போலீஸ் சூப்பிரண்டிற்கும் ஆடியோ மூலம் அளிக்கும் புகார் மனு என கூறியுள்ளார். நானும் எனது மனைவியும் மிகவும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம்.

இந்நிலையில் எனது நண்பர் என் குடும்பத்தில் குறுக்கிட்டு எங்களது வாழ்க்கையை சிதைத்து விட்டார். எனக்கு என் நண்பன் செய்த செயல் மீளா துயரத்தை தந்தது. இதனால் நான் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன் என அழுது கொண்டு கூறுகிறார். எனவே என் நண்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முடிக்கிறார்''. இந்த சம்பம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

SUICIDEATTEMPT, BUS DRIVER, THOOTHUKUDI, FAMILY