'வரதட்சணை கொடுக்கல, உனக்கு வாரிசு ஒரு கேடா'...'யாரும் செய்ய துணியாத காரியம்'... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வரதட்சணை கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மருமகளின் வயிற்றில், மாமியார் தீ வைத்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'வரதட்சணை கொடுக்கல, உனக்கு வாரிசு ஒரு கேடா'...'யாரும் செய்ய துணியாத காரியம்'... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!

தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் இரண்டாவது மகளான சங்கீதாவிற்கும், சூரியம்பட்டியை சேர்ந்த ராமையன் மகன் முருகானந்தத்திற்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்கிய சங்கீதாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. திருமணமான சில நாட்களிலேயே மாமியார் புஷ்பவள்ளி தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சங்கீதாவிடம் மாமியார் புஷ்பவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால் சங்கீதா அனைத்து கொடுமைகளையும் தாங்கி கொண்டு, எதையும் தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். தனது கண்முன்னே மனைவி துன்புறுத்தப்படுவதை பார்த்த கணவர் முருகானந்தமும், எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை கடந்த 4-ந் தேதி, நீயும் உன் வாரிசும் உயிரோடு இருக்கக்கூடாது என கூறிய புஷ்பவள்ளி, யாரும் செய்ய துணியாத கொடூர காரியத்தை செய்ய முடிவெடுத்தார். தனது மருமகள் மற்றும் அவள் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சங்கீதாவின் வயிற்றுப்பகுதியில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சங்கீதாவிற்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாமியார் புஸ்பவள்ளியை கைது செய்தனர்.

இதனிடையே சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. அதில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள சங்கீதா, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு யார் காரணம்? தன்னை தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், தனது குழந்தையை கணவரிடமோ, மாமியாரிடமோ கொடுக்க வேண்டாம். தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.சங்கீதா உருக்கமாக பேசியுள்ள இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.