'எனக்கு வேற வழி தெரியல'... 'முதல்வரின் படத்தை நெற்றியில் வரைந்த ஆசிரியர்'... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவத்தை ஆசிரியர் ஒருவர் தனது நெற்றியில் வரைந்து முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'எனக்கு வேற வழி தெரியல'... 'முதல்வரின் படத்தை நெற்றியில் வரைந்த ஆசிரியர்'... காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகச் செல்வம் என்பவர் பணி புரிந்து வருகிறார். அவர் 40 வயதை எட்டியுள்ள நிலையில், அவர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர். மாதம் 7,700 ரூபாய் மட்டுமே ஊதியம் வரும் நிலையில், அவர் தனது குடும்பத்தை நடத்த முடியாமல் தள்ளாடி வருகிறார். எனவே, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தன் நெற்றியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தைச் செல்வம் வரைந்தார்.

கண்ணாடியை பார்த்தது கொண்டே 20 நிமிடங்களில் வாட்டர் கலர் கொண்ட முதல்வரின் ஓவியத்தைத் தீட்டிய செல்வத்தைப் பிற ஆசிரியர்கள் பாராட்டினர். இதுகுறித்து பேசிய ஆசிரியர் செல்வம், கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னைப் போன்ற பகுதிநேர ஆசிரியர்கள் 16.ஆயிரம் பேரை பணியில் நியமித்தார். கடந்த 8 ஆண்டுகளான பணிபுரிந்து வருகிறோம். தற்போது , 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் இருக்கிறோம்.

தற்போது எங்களுக்கு மாதம் 7,700 ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் அந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தடுமாறி வருகிறோம். எனவே, எங்களைப் பணி நிரந்தரம் செய்து முதல்வர் உதவி செய்ய வேண்டும். இதற்காகவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்தைப் பெறும் வகையில், அவரின் உருவப்படத்தை என் நெற்றியில் வரைந்தேன். எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்க்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒளியேற்றுவார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்