'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வருகிறது. தங்களது பகுதியில் உடலை புதைக்கக்கூடாது என அந்தந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். மேலும் உடலை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்

முன்னதாக இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் இதுபோல போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் நல்லடக்கம் விவகாரத்தில் மனிதநேயத்துடன் மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதுபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.