சிறுமியை போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்... மாணவனுக்கு கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுமியை போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்ட மாணவனை, இளைஞர்கள் தூக்கிச்சென்று உடல் முழுவதும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்... மாணவனுக்கு கொடூர தண்டனை!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள ரெட்டியூர் பகுதியைச்  சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் 17 வயதான ஹரிஹரன், சேலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில், இவரது சித்தியின் மகளான 14 வயது சிறுமியை அதேப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், தனது செல்போனில் படம் பிடித்து தனது நண்பர்களிடம் காட்டி வந்துள்ளார்.

இதையறிந்த ஹரிஹரன், இதுபோன்று சிறுமிகளை படம் பிடிக்கக்கூடாது எனக்கூறி கண்டித்ததாகக் கூறப்படகிறது. மேலும் அவரது உறவினர்களிடம் கூறி, இளைஞரின் செல்போனில் இருந்த புகைப்படத்தை அழிக்கச் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அவரது தம்பி ராஜேஷ், அவரது நண்பர் செல்வராசன் ஆகியோர் நேற்று இரவு 7 மணியளவில் வெளியில் சென்ற மாணவர் ஹரிஹரனை வாயில் துணியை அடைத்து தூக்கிச் சென்றனர்.

அங்குள்ள பாறைக்கு கொண்டு சென்று மாணவரை ஊசியால் உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். மேலும் பாறை மேல் இருந்து கீழே தள்ளி கொலை செய்யவும் முயன்றுள்ளனர். மாணவனின் வாயை துணியால் அடைத்ததால், கூச்சலிட முடியாமல் அவர் முணங்கினார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் முனகல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்தார். இதனால் 3 இளைஞர்களும் ஹரிஹரனை விட்டு விட்டு தப்பியோடினர்.

இதைத்தொடர்ந்து  மாணவரை மீட்ட உறவினர்கள், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மாணவர் ஹரிஹரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

OMALUR, TORTURE