தமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வழக்கமாக தமிழகத்தை பொறுத்தவரை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 அல்லது 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தற்போது கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி மாணவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கு முடிந்தாலும் வழக்கம்போல ஜூன் 2 அல்லது 3-ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படாது, மாறாக ஜூன் மாத இறுதியில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மறுபுறம் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.