'கார் பேக் சீட்டில் கிடந்த சடலம்...' 'டேப்பால் மூடியிருந்த முகம்...' 'கதறிய தந்தை...' - கொடூர கொலை குறித்த பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டத்தில் சித்தப்பா மகனை கடத்தி கொண்டுபோய் முகத்தை டேப்பால் மூடி, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

'கார் பேக் சீட்டில் கிடந்த சடலம்...' 'டேப்பால் மூடியிருந்த முகம்...' 'கதறிய தந்தை...' - கொடூர கொலை குறித்த பகீர் பின்னணி...!

சேலம் மாவட்டம் நல்லணம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயான இவருடைய மகன் பூபாலன் (24). எம்.ஏ., பட்டதாரி ஆவார். அரசுப்பணிக்காக, உள்ளூரில் உள்ள ஒரு தனியார் போட்டித்தேர்வு மையத்தில் படித்து வந்தார்.

ஆகஸ்ட் 7-ம் தேதியன்று இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபாலன், அவருக்குத் தெரிந்த சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். நண்பர்களிடம் விசாரித்தபோதும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து பூபாலனின் தந்தை செல்வம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்றும், சம்பவத்தன்று இரவு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள்தான் மகனைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (08-08-2020) இரவு ரெட்டிமணியக்காரனூர் மண் கரடு பகுதியில் ஒரு கார் தனியாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார், அந்த காரை தீவிரமாக சோதனை நடத்தினர். பின் சீட்டில் ஒரு மூட்டை கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது, மேலும் முகத்தை பார்சல் கட்டும் டேப்பால் சுற்றி அரைநிர்வாண நிலையில் போட்டிருந்தனர். கொலையாளிகள் இறந்தவரின் முகத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது  என்பதற்காக முகத்தை முழுவதும் டேப்பால் சுற்றி வைத்திருந்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது, காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பூபாலன்தான் எண்பது தெரிய வந்தது.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார், பூபாலனின் பெரியப்பா மகன் ஏழுமலை (35), கார் உரிமையாளர் ஜெகன் (21), சத்தியமூர்த்தி (26) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கொல்லப்பட்ட பூபாலன் குடும்பத்துக்கும், ஏழுமலை குடும்பத்திற்கும் சில வருடங்களாக நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. தற்போது செல்வம் புதிதாக வீடு கட்டி வருவதால், அவருடைய மகனைக் கடத்தி பணம் கேட்கலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.

அதற்காக அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பூபாலனை ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு கடத்திச் சென்றுள்ளார். அங்கு பூபாலன் கத்தி கூச்சல் போட்டதால் அவர்கள் பூபாலனின் வாய், முகத்தை டேப்பால் சுற்றியுள்ளனர். தப்பிச் செல்லாமல் இருக்க கை, கால்களையும் கயிற்றால் கட்டியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பூபாலனை கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு, சாக்குப்பையில் மூட்டையாக கட்டி காரின் பின் சீட்டில் வைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறில் சித்தப்பா மகனை பெரியப்பா மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் இளம்பிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்