'கோயில் நகையில் முறைகேடால்லாம் நடக்கல...' எடை குறைந்ததற்கு காரணம் 'இது' தான்...! ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை தொடர்பான சர்ச்சையில் கோயில் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

'கோயில் நகையில் முறைகேடால்லாம் நடக்கல...' எடை குறைந்ததற்கு காரணம் 'இது' தான்...! ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிக்கை...!

ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துருப்பதாவது,

‘’ராமேஸ்வரம்  அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் நகைகளில் எடை குறைவு ஏற்பட்டதாக திருக்கோயில் பணியாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டது குறித்து 03-11-2020, 04-11-2020 ஆகிய நாட்களில் பல்வேறு செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, ஊடகங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.

இந்த திருக்கோயிலின் 1978-ல் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. இதன்பின்னர் தற்பொழுது சிவகங்கை துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலரால் 29-01-2019 முதல் 07-03-2019 முடிய இத்திருக்கோயிலின் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை பெறப்பட்டது.

நாற்பது ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்த 215 இனங்களில் தேய்மானம் காரணமாக தான் எடை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை ரூ 2,11,790 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14 பொன் இனங்களில் சிறிய அளவிலான பழுதுகள் ஏற்பட்டுள்ளதற்கான மதிப்பு ரூ 2,454 என வரையறுத்து, மொத்தமாக ரூ. 2,14,244 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி இனங்களில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 344 இனங்களில் 42 இனங்களில் 25,811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை ரூ 10,93,340 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிப்பீடு செய்யப்பட்டு வெள்ளி இனங்களில் தங்கம் முலாம் பூசப்பட்ட இனங்களில் 43 கிராம் 700 மி.கி எடை குறைவிற்கான மதிப்பு ரூ .1,35,670 என மொத்தம் சேர்த்து ரூ .12,29,010 இழப்பு எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து வசூல் செய்யலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க வெள்ளி இனங்களில் அனைத்து இனங்களும் சரியாக உள்ளது. கடந்த மறு மதிப்பீட்டிற்கும் தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே 40 வருடங்கள் இடைவெளி உள்ள நிலையில் ஏற்கனவே இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 2 பேர், தற்போது பணியில் உள்ளவர்கள் 32 பேர் என மொத்தம் 47 பணியாற்றி உள்ளனர். நாற்பதாண்டு கால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு அதற்கான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம்கோரி தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மேற்படி மதிப்பீட்டு அறிக்கையிலோ திருக்கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. இதற்காக பொது மக்களோ பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ‘’

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்