‘ரயில்வே பிளாட்பார்மிலேயே வந்த பிரசவ வலி’... ‘துடிதுடித்த கர்ப்பிணி பெண்’... ‘காவலர்களுக்கு குவியும் பாராட்டு'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில்நிலைய நடைமேடையிலேயே நிறை மாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ரயில்வே பிளாட்பார்மிலேயே வந்த பிரசவ வலி’... ‘துடிதுடித்த கர்ப்பிணி பெண்’... ‘காவலர்களுக்கு குவியும் பாராட்டு'

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி 28  வயதான மாரியம்மாள். நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது தாயார் வீடு கடையத்தில் உள்ளது. இந்நிலையில் தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக, திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் கடையம் செல்லும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது அவருக்கு நடைமேடையிலேயே, திடீரென பிரசவ வலி ஏற்படவே இதைப்பார்த்த அங்கிருந்த பிற பயணிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் ஜெயபால், எஸ்ஐ. ஜூலியட், தலைமை காவலர் ராதா உள்ளிட்ட குழுவினர் அங்கு வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சில் மாரியம்மாளை கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவருக்கு தாங்க முடியாத பிரசவ வலி ஏற்பட்டதால் செய்வதறியாது பெண் காவலர்கள் தவித்தனர். அப்போது அவருக்கு ரயில் நிலைய மேடையிலேயே பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  

அங்கேயே வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து 108 ஆம்புலன்சில் ஏற்றி தாயும் சேயும் பாளை., ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  தகுந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளித்த பெண் காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ரயிலில் பயணிக்க வந்த பயணிகள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

NELLAI, DELIVARY, POLICE, RAILWAY