‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த மகளின் முகத்தில் அமிலம் வீசி அடித்து உதைத்த கொடுமை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
![‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..! ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/pregnant-daughter-attacked-with-acid-by-father-in-tiruvallur-thum.jpg)
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மகள் தீபிகா. இவர் அப்பகுதியை சேர்ந்த சாய்குமார் என்பவரை காதலித்துள்ளார். இவர்களது திருமணத்துக்கு தீபிகாவின் தந்தை பாலகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு சாய்குமாரை தீபிகா திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியான மகள் தீபிகாவின் வீட்டுக்கு பாலகுமார் வந்துள்ளார். அப்போது மகளை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு தீபிகா மறுத்துள்ளார். அந்த சமயம் பாலகுமாருடன் வந்த சிலர் ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளனர். இதனால் முகம் வெந்து தீபிகா அலறியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த மாமியார் பாக்யலட்சுமி மற்றும் கர்ப்பமாக உள்ள அந்த வீட்டின் மற்றொரு மருமகள் சந்தியா ஆகியோரின் முகத்திலும் அமிலத்தை பூசியுள்ளனர். இதனால் இருவரும் துடிதுடித்து கதறியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் மயங்கி கிடந்த மகள் தீபிகாவை தாங்கள் கொண்டுவந்த காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த சாய்குமாரின் தந்தை பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த தகவலை அறிந்த பாலகுமார் உடனே தனது மகளை நடுரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனை அடுத்து தீபிகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் தீபிகாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணவர் சாய்குமாரை விட்டு பிரிந்து வரச்சொல்லி தந்தை மிரட்டியதாகவும், பின்னர் தன்னை கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து உதைத்தாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாலகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.