மதுபானம் கடத்தலை தடுக்க முயற்சி.. இரும்பு கம்பியால் தாக்கி காவலர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுபானம் கடத்தல் காரர்களுக்கும், தனிப்படை போலீசாருக்கும் நள்ளிரவில் நடந்த மோதலில், காவலர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானம் கடத்தலை தடுக்க முயற்சி.. இரும்பு கம்பியால் தாக்கி காவலர் படுகாயம்!

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, நேற்று முதல் மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கடந்த 2  தினங்களாகவே, காரைக்காலிலிருந்து பெரியளவில் மது கடத்தப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க  எஸ்.பி. தலைமையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

ஏப்ரல் 15 அன்று மயிலாடுதுறை அருகே பேச்சாவடி என்ற இடத்தில், நள்ளிரவில் தனிப் படையைச் சேர்ந்த ஏட்டு கோபி, காவலர் சுபாஷ் இருவரும் காத்திருந்தனர். அப்போது, சாராய வியாபாரி ராஜூவின் மகன் பாபு என்பவனும், இன்னொருவனும், 2 மூட்டை மது பாட்டில்களோடு வந்தபோது  காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது திடீரென  அதில் ஒருவன் தப்பித்துச் சென்று, அவனது கூட்டாளிகள் 10 நபர்களை அழைத்து  வந்து காவலர்களைத்  தள்ளிவிட்டு ஒரு மது மூட்டையைப் பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றதாக காவலர் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

கடத்தல்காரர்களைப்  பின் தொடர்ந்து, காவலர் சுபாஷ் விரட்டிச் சென்றார். அப்போது பட்டமங்கலம் ஆராயத் தெரு அருகே, அவரைப் பலரும்  சூழ்ந்துகொண்டனர். அவரது அடையாள அட்டை மற்றும் செல்போனை பிடிங்கிக்கொண்டு இரும்புக் கம்பிகளால் கடத்தல்காரர்கள் தாக்கியதாகத் தெரிகிறது.

'போலீஸ்... போலீஸ்'.. என்று சத்தம் போட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை என்று ஆதங்கத்துடன் காவலர் சுபாஷ் கூறியுள்ளார். கடத்தல்காரர்களிடமிருந்து ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து, தெரிந்த ஒருவர் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார் காவலர் சுபாஷ். மேலும் ஒரு  மூட்டை மதுவுடன் பாலு என்பவன் சிக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

SMUGGLING, POLICE, BRUTALLY, ATTACKED