நீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நீட்தேர்வு விவகாரத்தில் பா.ஜ.க. வின்  கருத்து அ.தி.மு.க.வை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.!

பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகைத் தந்தார். சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகம் இதுவரை கண்டிராத கூட்டணியை அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பா.ஜ.க. அமைத்துள்ளது. பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார்.

'தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நதி நீர் இணைப்புக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி மக்களை ஏமாற்றிவருகிறார். தி.மு.க.வின் வேட்பாளர்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் தொலைத் தொடர்பு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்' என்று பியூஸ் புகார் தெரிவித்துள்ளார்.

'சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினோம். விமானத்தில் அறிவிப்பை, தமிழில் ஒளிபரப்பு செய்தோம். ரயில் டிக்கெட் பதிவை தமிழில் கொண்டு வந்து தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று காங்கிரஸ் கூறுவது வெற்றுவாக்குறுதி. நீட் தேர்வு தேவையில்லை என்று அ.தி.மு.க. கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை வைத்தது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மேலும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு செய்வார்’ என்றார் பியூஸ் கோயல்.