காதலில் சேராத 'விரக்தி'யில் ... 'விஷம்' குடித்த காதலி ... வேதனையில் 'காதலன்' எடுத்த 'விபரீத' முடிவு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலில் சேராத 'விரக்தி'யில் ... 'விஷம்' குடித்த காதலி ... வேதனையில் 'காதலன்' எடுத்த 'விபரீத' முடிவு !

திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிராஜ்தீன் (28). பெயிண்டராக பணியாற்றி வந்த இவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த மேனகா (25) என்பவரை காதலித்து வந்தார். மேனகா புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரிய வர, இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோர்கள் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 27 ஆம் தேதி அன்று மேனகா விஷம் குடித்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு  சிகிச்சைக்காக அவர் பணியாற்றிய மருத்துவமனையிலே சேர்த்தனர். காதலி விஷம் குடித்த தகவல் அறிந்த சிராஜ்தீன் மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.

இரண்டு நாள் முன்னதாக வேலையை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்த சிராஜ்தீன், திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலி விஷம் குடித்ததால் வருத்தத்துடன் காணப்பட்ட காதலர் சிராஜ்தீன் இந்த முடிவை எடுத்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேனகாவும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TRICHY, SUICIDE, LOVERS