திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த செவிலியர்.. மருத்துவமனையிலேயே அரிவாளால் வெட்டிய தாய்மாமன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரத்தில் பயிற்சி செவிலியர் ஒருவர் மருத்துவமனைக்குள்ளேயே, அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த செவிலியர்.. மருத்துவமனையிலேயே அரிவாளால் வெட்டிய தாய்மாமன்!

காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில், நிமிர்ந்தகாரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இளம்பெண் ஒருவர் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது 22 வயது மிக்க இளைஞர் ஒருவர், மருத்துவமனைக்குள் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

பயிற்சி செவிலியரிடம் சென்ற இளைஞர், தனது உடம்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அவரை கழுத்தில் வெட்டியுள்ளார். உடனே பயிற்சி செவிலியர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். வெட்டிய இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பயிற்சி செவிலியரை, அருகில் இருந்த செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்தை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், விசாரணை மேற்கொண்டனர். அதில், செவிலியரை அவரது தாய்மாமனான முத்துவே அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.

தாய்மாமன் முத்து, திருமணம் செய்ய நீண்ட நாட்களாக பயிற்சி செவிலியரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அவர், தனது தாய்மாமனை மணக்க மறுத்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக கோபத்தில் இருந்த வந்த முத்து இன்று போதையின் ஆதிக்கத்தில் இருந்த நிலையில், பயிற்சி செவிலியரை மருத்துவமனைக்கே சென்று அரிவாளால் வெட்டியுள்ளார்.

செவிலியரை வெட்டிவிட்டு தப்பியோடிய தாய்மாமன் முத்துவை போலீசார் தேடி வந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், செவிலியரை அரிவாளால் வெட்டிய அவரது தாய்மாமன் முத்துவும், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதையடுத்து  தகவலறிந்த உறவினர்கள் முத்துவையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ATTACK, KANCHIPURAM, UNCLE