"சின்ன வயசுல நடக்காம போச்சு".. 73 வயதில் காதுகுத்து.. தந்தைக்காக மகள்கள் எடுத்த முடிவு.. சுவாரஸ்யம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறு வயதில் தனக்கு நடக்காமல் போன விஷயத்தை 73 வயதில் விளையாட்டாக முதியவர் ஒருவர் சொல்லவே, அதன் பின்னர் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"சின்ன வயசுல நடக்காம போச்சு".. 73 வயதில் காதுகுத்து.. தந்தைக்காக மகள்கள் எடுத்த முடிவு.. சுவாரஸ்யம்!!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பார்சல் லாரி டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

வரதராஜனின் மனைவி, கடந்த ஆண்டு இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் ஐந்து பேருக்கும் திருமணமாகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, வரதராஜனுக்கு மொத்தம் 8 பேரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது மகனுடன் வசித்து வரும் வரதராஜன், சமீபத்தில் யதார்த்தமாக தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடும் போது தனக்கு சிறு வயதில் காது குத்தவில்லை என்பதை விளையாட்டாக கூறி உள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், நான்கு மகள்களும், தந்தைக்கு காது குத்தி நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சேந்தமங்கலம் பகுதி அருகே அமைந்துள்ள கோவில் ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன் வரதராஜனுக்கு மொட்டை அடித்து காது குத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மகன், மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் என நிறைய பேர் பங்கேற்றனர்.

73 வயதில் தனக்கு காது குத்தியது பற்றி பேசிய வரதராஜன், "சிறு வயதில் எனக்கு காது குத்த வைத்திருந்த தோடு மற்றும் துணிகள் திருடு போனது. இதன் பின்னர் தாயும் இறந்து போனதால் எனக்கு காது குத்தாமல் விட்டு விட்டனர். இது ஒரு குறையாக என் மனதில் நீண்ட நாட்கள் இருந்தது. அதை எனது மகள்கள் நிறைவேற்றி உள்ளனர். இந்த நிகழ்வால், நான் ஒரு குழந்தையை போலவே உணர்கிறேன். வயதான பெற்றோர்களின் ஆசையை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்" என கூறி உள்ளார்.

தந்தைக்கு மகள்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியது தொடர்பான புகைப்படங்கள், தற்போது பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

EAR PIERCING, OLD MAN, NAMAKKAL

மற்ற செய்திகள்