டிவியில் ‘சீரியல்’ பார்த்துக்கொண்டிருந்த பெண்கள்.. திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டு கதவை பூட்டாமல் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிவியில் ‘சீரியல்’ பார்த்துக்கொண்டிருந்த பெண்கள்.. திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரை சேர்ந்தவர் மேகநாதன். ஆடிட்டரான இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இரண்டு சகோதரர்களும் அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூவரும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில் மூவரும் வழக்கம் போல நேற்று பணிக்கு சென்று விட்ட நிலையில், அவர்களது மனைவிகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது டிவியில் அதிக சத்தத்துடன் சீரியல் பார்த்துக்கொண்டே சமையல் அறையில் இரு பெண்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயம் வீட்டின் கேட் திறந்து இருப்பதை அறிந்த முகமூடி கொள்ளையர்கள் இருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது சமையல் அறைக்கு சென்ற அவர்கள் இரண்டு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை எங்கே என கேட்டுள்ளனர். உயிருக்கு பயந்த அவர்கள் பீரோவில் இருந்த நகை, பணம் அனைத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் பெண்கள் சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். இதனை அடுத்து வேகமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த சம்பவம் தெரியாமல் வீட்டின் மேல் மாடியில் துணி காயப் போட்டுக்கொண்டிருந்த மற்றொரு பெண் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது இரு பெண்களின் வாயிலும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே துணியை எடுத்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் கொள்ளையர்கள் தப்பிச் செல்வதாக கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாஸ்க் அணிந்த படி தலையில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு இருவர் வீடுகளை நோட்டமிட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் இந்த வீடு ஒதுக்குப்புறமாக இருந்ததாலும், வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் இருந்ததாலும் கொள்ளையர்கள் எளிதாக வீட்டுக்குள் புகுந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் இதுபோல் டிவியில் அதிக சத்தத்தை வைத்துக் கொண்டு, கதவை பூட்டாமல் இருந்தால் வெளியில் யார் வருகிறார்கள் என்பது தெரியாது. இது கொள்ளையர்களுக்கு சாதகமாகிவிடும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ROBBERY, MONEY, KANCHIPURAM, GOLD

மற்ற செய்திகள்