கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றி 'உயிரிழந்த' மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா '25 லட்சம்' ரூபாய் இழப்பீடு...! - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றி 'உயிரிழந்த' மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா '25 லட்சம்' ரூபாய் இழப்பீடு...! - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்ட நோயாளிகளை, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவர்களும், செவிலியர்களும், பற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் அனைவராலும் போற்றக் கூடிய பணியை செய்து வருகின்றனர்.

இந்த பணியில் தமது உயிரை பொருட்ப்படுத்தாமல் களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை மக்களுக்காக தியாகம் செய்துள்ளனர். இது ஈடுசெய்யப்பட முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும்வகையில், கொரோனா சிகிச்சைப் பணியாற்றியபோது, அந்த கொடுந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்கிட முடிவு செய்துள்ளது.

மேலும், அல்லும் பகலும் நமது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக காணப்படும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு இருபதாயிரம் ரூபாயும், இதர சுகாதார பணியாளர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு இருபதாயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்