“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்!”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் மீனா. தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் தலைமை ஆய்வாளராகப் பணிபுரியும் இவரது முக்கிய பணி, மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதித்து, பரிசோதனை முடிவுகளைக் கொடுப்பதுதான்.  அத்துடன் சொந்தமாக மருந்துகள் விற்பனைத் தொழிலையும் செய்து வருபவர்.

“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்!”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா!

இவர் தனது வயது முதிர்ந்த பெற்றோருடன் சென்னை அண்ணா நகரில் வசித்தவர், ஆனால் கடந்த 3 மாதங்களாக கொரோனா பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும் அத்தனை எச்சரிக்கையுடன் இருந்தும் இவருக்கு கொரோனா தொற்றியது. இதனையடுத்து கடுமையான காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறலுடன் அவதிப்பட்டதாகவும், ஆனால்  சித்த மருத்துவத்தை முழுமையாக நம்பி சிகிச்சை பெற்ற பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக  'இந்து தமிழ்' இணைய இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில், கடந்த ஜூலை 25-ம் தேதி லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து, செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் 26-ம் தேதி தனக்கு கொரோனா உறுதியானதாகவும், தொடர்ந்து 105 டிகிரி காய்ச்சல், கடும் இருமல், வாந்தி, 82-க்கும் கீழே ஆக்சிஜன் அளவு எல்லாம் இருந்ததால் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஜவஹர் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு கொரோனா மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டருடன் அட்மிட் ஆன இவர், காய்ச்சல், இருமல், சளிக்கு எல்லாவற்றுக்கும் தனித்தனியாக சித்த மருந்துகள் உட்கொண்டதுடன், தினமும், மணிக்கு ஒருமுறை தேவைக்கேற்ப ஏதேனும் ஒரு சித்த மருந்து கஷாயம் அல்லது குடிநீரை பருகி வந்துள்ளார்.  பின்னர் நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததாகவும், படுக்கையில் இருந்து எழுந்தாலே ஆக்சிஜன் அளவு குறைந்ததாகவும், மருத்துவர் வீரபாபு மற்றும் குழுவினரின் நம்பிக்கையாலும், மூலிகை மருந்துகளால், 4 நாட்களுக்குப் பிறகு தனது காய்ச்சலும், நோய்த்தொற்றும் குறைய ஆரம்பித்ததாகவும், தற்போது ஆக்சிஜன் இல்லாமலே, சாதாரணமாக, 98 என்ற அளவில் சுவாசிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நவீன மருத்துவத்தில் உடனடியாக நிவாரணம் கிடைக்க மருந்துகளைக் கொடுப்பதாகவும், ஆனால் சித்த மருத்துவத்தில் 100 சதவீதம் பக்கவிளைவும் இல்லாமல், அதே சமயம் அதிகபட்சம் 10 நாட்களில் தொற்று சரியாகிவிடுவதை காண முடிவதாகவும் குறிப்பிடும் மீனா, “வயதான பெற்றோரை நினைத்தும் கவலைப்பட்டதுடன், குறைந்த வயது என்ற போதிலும் உயிர் பிழைப்பேனா என்று சந்தேகப்பட்டேன். இப்போதுதான் உயிர் என்பதன் மகத்துவமே புரிந்தது. அரசு மருத்துவமனை என்றாலே முறையான சிகிச்சை இருக்காது என்று ஒரு பிம்பம் உள்ளதாகவும், உண்மை அது அல்ல, உண்மையில் நன்றாகவே தரமான சிகிச்சையை தன்னால் எடுத்துக்கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும் என்றும், இதைச் சரியாக கொண்டுவந்தால், கொரோனா இல்லாத தமிழ்நாட்டை மீண்டும் அடையமுடியும்”' என்கிறார்.

இதுபற்றி பேசிய மருத்துவர் வீரபாபு, சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகவும், தற்போது மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் அரசு, சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடங்கியுள்ளதாகவும், கூறுவதுடன், அதே சமயம் சித்த மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மட்டுமே மக்கள் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்