‘மகனின் சடலத்தோடு இரண்டு நாட்களாகத் தூங்கிய தந்தை..’ இறந்தது தெரிந்தபின் நடந்த சோகம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி ஒருவர் மகனின் சடலத்தோடு இரண்டு நாட்களாகத் தூங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மகனின் சடலத்தோடு இரண்டு நாட்களாகத் தூங்கிய தந்தை..’ இறந்தது தெரிந்தபின் நடந்த சோகம்..

சென்னை அடையாறில் வசித்து வந்த கலைக்கண்ணன் (70) என்பவர் மனவளர்ச்சி குன்றிய மகனைத் தனியாகக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக அவருடைய வீடு பூட்டியே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்க அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்த போது படுக்கையறையில் கலைக்கண்ணனின் மகனின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. கட்டிலின் அருகிலேயே கலைக்கண்ணனும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார் மகனின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில், “கலைக்கண்ணன் அக்கம்பக்கத்தில் யாருடனும் பேசாமல் அவரது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர் அன்பாக மகனை கவனித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் மகன் இறந்துபோய்விட அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மகனின் சடலத்தின் அருகிலேயே இரண்டு நாட்களாக இருந்துள்ளார்” எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலைக்கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இருவரின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் இறப்புக்கான காரணங்கள் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறந்த மகனின் சடலத்தோடு தந்தை இரண்டு நாட்களாகத் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FATHERANDSON