40 வருஷமா திருட்டு.. 100 வது முறை கைது.. ஸ்டைல் பாண்டிக்கே Tough கொடுத்த போண்டா ஆறுமுகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் 100 வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

40 வருஷமா திருட்டு.. 100 வது முறை கைது.. ஸ்டைல் பாண்டிக்கே Tough கொடுத்த போண்டா ஆறுமுகம்..!

கடந்த 15 ஆம் தேதி கோவை குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. அப்போது, பேருந்தில் பயணம் செய்த சபீர் அகமது என்ற பயணியின் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போயிருக்கிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ ஒருவர் தனது செல்போனை திருடிவிட்டதாக சபீர் கூச்சலிட்டிருக்கிறார். இதனிடையே, பேருந்தில் இருந்து ஒரு பயணி தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது, பிரகாசம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர் தப்பிச் செல்ல முயன்ற நபரை மடக்கி பிடித்திருக்கின்றனர். அவரை பரிசோதனை செய்தபோது காணாமல்போன சபீர் அகமதுவின் போன் அவரிடம் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, போலீசார் அந்நபரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற போண்டா ஆறுமுகம் (55) எனத் தெரியவந்தது. மேலும், தனது 14 வயது முதலே ஆறுமுகம் பிக் பாக்கெட், செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்திருக்கிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் கைதாகும் அவர் சில காலம் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்து மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும் வந்திருக்கிறார்.

இவருக்கு திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். போண்டா திருடி ஒருமுறை மாட்டிக்கொண்டதால் போண்டா ஆறுமுகம் என இவருக்கு பெயர் வந்திருக்கிறது. இதுப்பற்றி அவர் பேசுகையில் 99 முறை கைதாகியுள்ள நிலையில் தற்போது 100 வது முறையாக கைதாகி இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

போலீஸில் உள்ள தரவுகளின் படி கோவை மாநகரில் மட்டும் அவர் மீது 72 பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளன. இருப்பினும், சிறுவயதில் இருந்தே திருட்டில் ஈடுபட்டு வந்ததால், 100-வது முறை கைது என அவர் கூறுவது நம்பும் வகையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருசேர அளித்திருக்கிறது.

THEFT CASE, KOVAI, ARRESTED

மற்ற செய்திகள்