“சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் கசப்பாய் இருக்கும் எனில்”.. 4 வருட தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகல்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் தமிழில் பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

“சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் கசப்பாய் இருக்கும் எனில்”.. 4 வருட தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகல்.!

இதேபோல், நட்பே துணை, கள்ளன், மந்திர புன்னகை உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.  இவர் தற்போது இயக்குநர் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தில் நடிக்கிறார். கடந்த 4 வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 

இந்நிலையில், இதனிடையே மார்ச் 6-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய கரு. பழனியப்பன் தமது சமூக வலைதளத்தில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள்  வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!!  இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது..” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமது பதிவில், “தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!  சமூக நீதி , சுயமரியாதை ,  திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை  முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது!” என குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி !  முத்தங்கள் !  என குறிப்பிட்ட கரு. பழனியப்பன், “எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!!” என தெரிவித்துள்ளார்.

KARU PALANIYAPPAN, ZEE TAMIL TV, THAMIZHA THAMIZHA

மற்ற செய்திகள்