‘இந்த ட்ரெஸ் போட்டு இப்படி ஆடுறதுக்கு’.. ‘அவதூறா பேசுறாங்க’.. தன் மீதான புகாருக்கு ‘கரகாட்ட கலைஞர்’ பரமேஸ்வரி பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மயில் மனோ. இவர் அண்மையில் முன்வைத்த புகாரின்படி, “நாங்கள் பாரம்பரியமாக இந்த தொழில் செய்யவில்லை என்றாலும் இடைப்பட்ட காலத்தில் இருந்து கரகாட்ட தொழிலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக பரமேஸ்வரி கலைக்குழு என்கிற youtube சேனலால் பிரச்சனை வந்தது. அவர்களைப்போல் ஆபாசமாக ஆடவும் பாடவும் சொல்லி நாங்கள் வேலைக்கு போகும் இடத்தில் எங்களை கேட்கிறார்கள். அவர்கள் 95 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் நாங்கள் கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைகளை மட்டுமே பண்ணுவோம் என்று உறுதிபட கூறுகிறோம். ஆனால் பரமேஸ்வரி இப்படி ஆடுவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

‘இந்த ட்ரெஸ் போட்டு இப்படி ஆடுறதுக்கு’.. ‘அவதூறா பேசுறாங்க’.. தன் மீதான புகாருக்கு ‘கரகாட்ட கலைஞர்’ பரமேஸ்வரி பதில்!

இதனால் பரமேஸ்வரியிடம் நேரடியாக நான் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நீ இப்படி ஆபாசமாக ஆடுவதால் நிறைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறினேன். இதுபோன்று ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவதை நிறுத்திவிடு என்று கூறினேன். அதற்கு அந்த பெண், ‘நீ என்ன முதலமைச்சரா? கலெக்டரா? அல்லது கிராமிய கலை சங்க தலைவியா? உன்னால் முடிந்தால் உன் சங்கத்தில் இருந்து ஆளை கூட்டிக் கொண்டு வா.. நேரத்தை விரையம்ம் செய்யாதே. என்னை என்ன செய்ய முடியுமோ செய்!’ என்று அந்த பெண் கூறிவிட்டார். இங்கு எவ்வளவோ மூத்த கலைஞர்கள் இருக்கிறார்கள், ஆனால் கலைக்கு உயிர் கொடுத்த பரமேஸ்வரி என்றெல்லாம் இவர்கள் யூட்யூபில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்ன அர்த்தம் இதெல்லாம்? அந்த பெண் ரெக்கார்ட் டான்ஸ் மட்டுமே ஆடும். இந்த பெண்ணால் தவில் கலைஞர்கள். தப்பாட்டக் கலைஞர்கள். நாட்டுப்புற. கிராமிய கலைஞர்கள் என பலருக்கும் வாய்ப்புகள் பறிபோகிறது. அந்த பெண் ரெக்கார்ட் டான்ஸ் ஆடக்கூடாது என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. அனைவரும் எங்கள் கலைக்கு உறுதுணையாக இருக்குமாறு கோருகிறோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் பரமேஸ்வரி இதுகுறித்து பேசும்போது, “கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு செய்தி பேப்பரில் கரகாட்டத்திற்கு உயிர் கொடுத்த பரமேஸ்வரி என்று குறிப்பிட்டு இருந்தார்கள், இதனால் அனைத்து கலைஞர்களும் நான் என்ன சாதித்து விட்டேன் என்று கேட்டார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்தும் இது பற்றி பேசினார்கள். ஆனால் நான் நேர்காணல் அளித்தேன். அந்த தலைப்பை நான் வைக்க சொல்லவில்லை என்று கூறினேன். ஆனால் அவர்களோ நான் பணம் கொடுத்து இப்படியான தலைப்பில் கட்டுரை எழுத சொன்னதாக சொன்னார்கள். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. இப்படி தொடங்கியதுதான் இந்த பிரச்சினை. மேலும் என் பின்னால் நிறைய பேர் இருப்பதாகவும், நான் அழகாக இருப்பதால் எனக்கு நிறைய பேர் உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லி தனிப்பட்ட முறையில் என்னை பற்றி அவதூறாக பேசியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த கலைஞர்கள் மீதும் எந்த கோபமும் இல்லை. மற்ற கலைகள் அழிந்து விடுமோ என்கிற பயத்தினால் அவர்கள் இப்படி பேசுகிறார்கள். எனவே அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் ஆள் வைத்து மிரட்டுவதாக திருநெல்வேலி மணிமாலா, திண்டுக்கல் பிரியா, திண்டுக்கல் ஜோதி, மல்டி பிரபு மற்றும் அலங்காநல்லூர் காளீஸ்வரன் ஆகியோர் சொல்கிறார்கள். என்னை பர்சனலாக தவறாக பேசுகிறார்கள். அவதூறாக பேசுகிறார்கள், இது குறித்து நான் புகார் அளித்திருக்கிறேன். எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் நான் செய்வது தவறு என்று நாகரீகமாக சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் இவர்களுடைய அணுகுமுறை என்னை அவதூறாக பேசுவதாக இருந்தது. இந்த டிரஸ் போட்டு இப்படியான வேலையை செய்வதற்கு நீ வேற ஏதாவது செய்யலாம் என்கிறார்கள். நான் அப்படி தவறாக ஒன்றுமே பண்ணவில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு ஆயிரம் விஷயம் இருக்கிறது. கலையை கெடுக்கும் அளவுக்கு நான் எதுவும் பண்ணவில்லை. எல்லாருமே ரெக்கார்ட் டான்ஸ் பாடல் போட்டு தான் ஆடுகிறார்கள். என் அம்மாவும் 10 வருடம் முன்பாக ஆடல் கலைஞர்தான். ஆனால் அதுக்கு முன்பாகவே அனைவரும் பாடல் போட்டு தான் ஆடினார்கள். நான் வரும்போதும் இப்படித்தான் ஆட வேண்டும் என நினைத்தேன்., அனைவரும் செய்ததையே நானும் செய்தேன். சமுதாயக் கொடி கட்டி இருப்பதாக சொல்லி என்னை சொன்னார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நான் ஒவ்வொரு ஊருக்கும் ஆடப் போகும்போது அந்த ஊரில் எந்த சமுதாயத்தினர் எங்களை ஆட அழைக்கிறார்களோ அவர்கள் அந்த கொடியை கொடுப்பார்கள். அதை கட்டிக் கொண்டு நாங்கள் ஆட வேண்டியதிருக்கும். இது வழக்கத்தில் இருப்பதுதான். இது அனைத்து கலைஞர்களும் செய்ததுதான். மூத்த கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஈடாக நான் கடுகளவு கூட வர முடியாது. ஏதோ மக்களுக்கு பிடித்து விட்டதால் வீடியோ எடுத்து போடுகிறார்கள். நான் பணம் கொடுத்து அனைவரையும் வரவழைக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு எனக்கு வருமானம் வரவில்லை. என்னுடைய குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு தான் எனக்கு வருமானம் வருகிறது. விளம்பரம் கொடுத்து என்னை பற்றி நான் செய்தி போடச் சொல்வதில்லை. அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனக்கு 356 youtube சேனல் இருக்கிறதா? அப்படி எல்லாம் இல்லை.

ஆனால் ரசிகர்கள் நிறைய  Fan Page வைத்திருக்கிறார்கள். என்னுடைய பெயரில் ஒரே ஒரு சேனல் தான் என்னிடம் இருக்கிறது. அது என்னுடைய பர்சனல் சேனல். அதை போய் பார்த்தீர்கள் என்றால் அதில் மற்ற வீடியோக்கள் எதுவுமே இருக்காது. youtube சேனல்களில் அனைத்து கலைஞர்களின் வீடியோவையும் எடுத்து போடுகிறார்கள். என் பெயரை போட்டால் நிறைய ஐடி வருகின்றன. என்னுடைய பெயரில் நிறைய ஃபேக் ஐடிகளும் ரசிகர்கள் ஐடியும் இருக்கின்றன. அவர்களை போய் நான் இதையெல்லாம் செய்யாதீர்கள் என்றும் சொல்ல முடியாது. தவறுதலாக செய்தால் மட்டுமே அவர்களை நான் கேள்வி கேட்க முடியும் அவர்களுக்கு பிடித்திருக்கிறது செய்கிறார்கள். இப்படி இன்ஸ்டாகிராமிலும் நிறைய ஐடிகள் இருக்கின்றன. அங்கும் என்னுடைய பெயரில் Fan Page ஐடிகள் இருக்கின்றன. என்னுடன் ஆடிய கலைஞர்கள் கூட இந்த விவகாரத்தில் அனைத்தும் தெரிந்தும் எதிர் தரப்பில் இருக்கின்றனர். அவர்கள் மீதும் எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை அவதூறாக ஒரு நான்கு பேர் பேசுகிறார்கள். அவர்களை நான் என்ன செய்தேன்? அவர்களைப் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நான் எதுவும் செய்யவில்லை, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன். என் வேலையை மட்டுமே நான் பார்க்கிறேன்!” என குறிப்பிட்டவர், கோ புதூர் பகுதியில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தரப்பு புகாரை மனுவாக அளித்துள்ளார்.

KARAKATTAM PARAMESWARI, கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி, மதுரை

மற்ற செய்திகள்