பெற்றோரின் எதிர்ப்பை மீறி... காதல் கல்யாணம்... விசாரணைக்கு வந்தபோது... இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி அருகே புதிதாக திருமணம் ஆன காதல் ஜோடியை, விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் நிலையம் முன்பே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் தாக்கி, புது மணப் பெண்ணை மட்டும் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி... காதல் கல்யாணம்... விசாரணைக்கு வந்தபோது... இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ரத்தினவேல் - தாசம்மாள் தம்பதியினர். இவா்களது 2 ஆவது மகன் பியூட்டலினும் (28), வெள்ளிச்சந்தை அறப்புறை காலனியைச் சோ்ந்த கணபதி மகள் சரண்யாவும்  கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் வேறு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் சரண்யா, பியூட்டலினை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 23 ஆம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் குடும்பம் தங்கள் மகள் காணவில்லை என்று, போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் காதல் தம்பதிகளை, கடந்த 25-ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனா். இதன்பேரில் காதல் தம்பதிகள் போலீஸ் நிலையம் வந்தனா். அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த சரண்யாவின் பெற்றோர்களும், உறவினா்களும் பியூட்டலினை சரமாரியாக தாக்கி விட்டு, காரில் சரண்யாவை கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பெண் வீட்டார், மருமகள் சரண்யாவை ஆணவ கொலை செய்ய போகிறோம் என போனில் மிரட்டுவதாகவும், இதனால் மருமகளை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யை சந்தித்து மாமியார் தாசம்மாள் மனு கொடுத்துள்ளார். புது மணப்பெண், பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

NEWLY, MARRIED, WOMAN, COUPLE