'பணி முடிந்து அதிகாலையில் வீடுதிரும்பிய'... 'ஐடி ஊழியருக்கு நடந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அம்பத்தூர் அருகே வேலை முடிந்து அதிகாலை வீடு திரும்பிய ஐடி ஊழியரை கத்திமுனையில் மிரட்டி, அவரது பைக் மற்றும் தங்க சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'பணி முடிந்து அதிகாலையில் வீடுதிரும்பிய'... 'ஐடி ஊழியருக்கு நடந்த கொடூரம்'!

சென்னை அம்பத்தூர் அருகே புதூர், பாரதி நகரை சேர்ந்தவர் 26 வயதான பிரசாந்த் கிரண். இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த திங்கள்கிழமையன்று மதியம் வேலைக்கு பைக்கில் கிளம்பி சென்றார். பின்னர் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில் வேலை முடிந்து, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

இவர் அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம், ஓம்சக்தி நகர் சர்வீஸ் சாலையில் வந்தபோது, அங்கு முட்புதரில் மறைந்திருந்த 2 பேர் பிரசாந்த்தை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டினர். இதையடுத்து பிரசாந்த்திடம் இருந்து விலையுயர்ந்த செல்போன், 3 சவரன் சங்கிலி மற்றும் பைக்கை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர்.  இப்புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். 

இதேபோல், முன்னதாக வியாசர்பாடியை சேர்ந்தவர் 38 வயதான செல்வம்.  இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த திங்கள்கிழமையன்று அதிகாலை 3  மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். பட்டரைவாக்கம்,  பொன்னியம்மன் கோயில் தெரு அருகே வந்தபோது, ஒரே பைக்கில் வந்த 3 பேர், இவரை வழிமறித்து  கத்தியால் தலையில் வெட்டிவிட்டு 15 ஆயிரம் மற்றும் செல்போனை  பறித்துக்கொண்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த செல்வத்தை அக்கம்  பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

ATTACKED, SNATCHING, CHENNAI, IT EMPLOYEE