‘கல்யாணமாகி 4 நாள் தான்’... ‘புது மனைவி கொடுத்த அதிர்ச்சி’... 'உறைந்துபோன கணவர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி அருகே புது மணப்பெண் திருமணமான 4 நாளில், செய்த காரியத்தால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

‘கல்யாணமாகி 4 நாள் தான்’... ‘புது மனைவி கொடுத்த அதிர்ச்சி’... 'உறைந்துபோன கணவர்'!

பொள்ளாச்சி பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் எண்ணி, மணப்பெண் தேடி வந்தனர். ஆனால், நீண்ட நாட்களாகியும் அவருக்கு மணப்பெண் கிடைக்காததால், புரோக்கர் ஒருவர் மூலம் வால்பாறை பகுதியை சேர்ந்த 27 வயதான ஒரு இளம்பெண்ணை பார்த்து பேசி முடித்தனர். அப்போது பெண் வீட்டார், உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மணப்பெண் கிடைத்த மகிழ்ச்சியில், திருமணத்துக்காக இளைஞர் வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு 12 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரு வீட்டார் உறவினர்களின்றி எளிமையாக திருமணம் நடந்தது. திருமணமாகி மனைவியுடன் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் தனது வீட்டிற்கு வந்த இளைஞரை, அக்கப்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், புது மணத் தம்பதிகளை வாழ்த்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் புதுமண தம்பதிகள் ஊட்டி, கொடைக்கானல் என தேனிலவுக்கு சென்றனர். அங்கு புது மனைவி வாந்தி எடுத்ததும், புட் பாய்சன் என்று நம்பி, இளைஞர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், புது மணப்பெண் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். திருமணமாகி 4 நாளில், 2 மாத கர்ப்பம் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், மனைவியிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்ததால், இருவரும் வீடு திரும்பினர். பெற்றோரிடம் இதுபற்றி கூற அவர்களும் அதிர்ந்து போயினர். பெண் கிடைக்காததால், சரியாக விசாரிக்காமல் அவசரத்தில் திருமணம் செய்துகொண்டதாக விரக்தி அடைந்த அந்த இளைஞர் போலீசில் புகார் செய்தார். மேலும், ஏற்கனவே அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன், அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியதை மறைத்து, 2-வது திருமணம் செய்ததும் தற்போது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருமாறு பெண்ணின் குடும்பத்தாரை அழைத்தநிலையில், புதுப்பெண் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HUSBAND, WIFE, PREGNANCY