'பிஞ்சு குழந்தைக்கு 1.1லட்சம்'...'ஹாஸ்பிடல் ஊழியருக்கு 20 ஆயிரம்'...அதிரவைத்த தம்பதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

'பிஞ்சு குழந்தைக்கு 1.1லட்சம்'...'ஹாஸ்பிடல் ஊழியருக்கு 20 ஆயிரம்'...அதிரவைத்த தம்பதி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மிகவும் வறுமையான நிலையில் இருக்கும் இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருந்தன. அந்த இரு குழந்தைகளுக்கும் நோயின் தாக்கம் இல்லை. இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கருவுற்ற நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று கடந்த 25 நாட்களுக்கு முன்பு பிறந்தது.

இந்நிலையில் புதிதாக பிறந்த பிஞ்சு குழந்தைக்கு இருதய பிரச்னை இருந்தது தற்போது அவர்களுக்கு தெரியவந்தது. இது அந்த தம்பதியை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் நிலையில், புதிதாக பிறந்த குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பது கடினம், எனவே அந்த குழந்தையை விற்க அந்த தம்பதி முடிவு செய்தது.

இதையடுத்து பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை 1.1 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு வயதான தம்பதிக்கு அவர்கள் விற்றுள்ளனர். அதற்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தையை வாங்கிய வயதான தம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஆகவே தாய்பால்கொடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால் அதனை அந்த வயதான தம்பதி மறுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர்கள் குழந்தை தங்களுடையது இல்லை என்பதை  ஒப்புக்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரியிடம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார்.

இதனையடுத்து மாவட்ட குழந்தை நல குழு இந்த இரு தம்பதியையும் அழைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் எச்.ஐ.வி. பாதித்த தம்பதி தங்களது குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றத்தை ஒப்புக் கொண்டனர்.மேலும் குழந்தையை வாங்கிய தம்பதியின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் மகன் நினைவாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவர் அதற்கு உதவுவதாக கூறிய நிலையில், அந்த குழந்தையை வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு 20 ஆயிரம் கமிஷனாகவும் பெற்றுள்ளார். இதற்கிடையே எச்.ஐ.வி பதித்த தம்பதி மருத்துவமனை ஊழியரின் உதவியுடன் குழந்தையை விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

HIV POSITIVE, BABY, COUPLE, TRICHY, HOSPITAL STAFF