தனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், முன்பு தான் பணியாற்றி வந்த கல்லூரி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ‘கல்லூரி’ கிளாஸ் ரூமில்... ஆசிரியை செய்த அதிர்ச்சி காரியம்... சென்னையில் நடந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரி சாந்தி (32). இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 5 வருடங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில், தெலுங்கு பிரிவில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதன்பின்னர் ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதி வெற்றிபெற்ற அவர், பெரம்பூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இருப்பினும் ஹரி சாந்தி, அவ்வப்போது முன்பு பணியாற்றிய கல்லூரிக்கு வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்வது வழக்கம். அதுபோல், நேற்று கல்லூரிக்கு வந்த அவர், தனது நண்பர்களை சந்தித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துள்ளார். கல்லூரி நேரம் முடிந்த பின்னும் ஹரி சாந்தி புறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் கல்லூரியின் முதல் தளத்தில், தான் பணியாற்றிய வகுப்பறைக்கு அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வகுப்பறையை சுத்தம் செய்ய சென்றபோது, மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது இடது கையின் மணிக்கட்டு அருகே கத்தியால் கிழித்து ரத்த காயம் இருந்துள்ளது. இதனால் பதறிப்போன ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கல்லூரிக்கு சென்ற போலீசார் ஹரி சாந்தியின் உடலை கைப்பற்றினர்.

மேலும் அவர் கொண்டு வந்த கைப்பை, செல்போன் ஆகியவை வகுப்பறையில் இருந்துள்ளது. ஹரி சாந்தி கல்லூரிக்குள் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத நிலையில், பள்ளி ஆசிரியை ஒருவர் கல்லூரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDE, PROFESSOR, CHENNAI